கருணாநிதியின் சமாதி அமைய போகும் இடம் இங்குதான்... இதோ மேப்
கருணாநிதியின் சமாதி அமைய போகும் இடம் குறித்து திமுக மேப் கொடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: கருணாநிதியின் சமாதி மெரினாவில் எங்கு அமைய வேண்டும் என்பதை திமுக பக்காவாக மேப் போட்டு கொடுத்துள்ளது.
கருணாநிதி நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது விருப்பத்தின் படி அவரது உடலை அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுகவினர் அனுமதி கேட்டனர்.
மெரினாவில் இடம் ஒதுக்குவதில் சட்டச் சிக்கல் உள்ளதால் காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கி தருகிறோம் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடினார்.
நேற்றைய தினம் இது அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று காலை காரசாரமான பல்வேறு முன்னுதாரணங்களுக்கு மத்தியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் தீர்ப்பு வழங்கினார்.
அதில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி கருணாநிதியின் சமாதி எங்கே அமைக்க வேண்டும் என்பதை திமுகவினர் மேப்பாக வரைந்து கொடுத்துள்ளனர். அதில் ஒரு பக்கம் அண்ணா சமாதியின் பக்கத்தில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அண்ணா சமாதிக்கு பக்கத்தில் எம்ஜிஆர் சமாதி உள்ளது. இதன் பின்னால் ஜெயலலிதா சமாதியும் அதன் பக்கத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான இடமும் மேப்பில் காணப்படுகிறது.