கருணாநிதியின் நினைவெல்லாம் நின்ற நித்யா.. நிஜத்தை இழந்து தவிக்கும் நிழல்!
கருணாநிதியின் உதவியாளர் நித்யா தற்போது துக்கத்தின் உச்சியில் இருக்கிறார்.
Recommended Video
சென்னை: மறைந்த கருணாநிதிக்கு ஒரு நிழல் கூடவே பயணித்து வந்தது.. சண்முகநாதன் அல்ல.. இந்த நிழல் கருணாநிதி சிரித்தால் சிரிக்கும், அவர் துயருற்றால் பதைபதைக்கும்... படுக்கையில் சோர்வாக சாய்ந்தாலே துடிதுடிக்கும். இன்று நிஜம் கனவாகி போனதால் இந்த நிழல் தனது மனம் முழுக்க சோகத்தை சுமந்து உலவி வருகிறது.
அரவணைத்து ஆறுதல் கூறினாலும் துக்கம் தொண்டையை அடைத்து கொண்டு கசப்பான நிமிடங்களை தற்போது கழித்து வருகிறது. அந்த நிழல்தான் நித்யா என்கிற நித்யானந்தம். வயது 39. பல்லாவரத்தை சேர்ந்தவர்.
மெல்ல.. மெல்ல.. நித்யா
"இந்த இளைஞன் உனக்கு நிறைய உதவி செய்ய சரியான ஆள்" என்று பேராசிரியர் அன்பழகன் கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைக்க, 2006-ம் ஆண்டு முதல்வரானதிலிருந்து உதவியாளராகத்தான் தன் பணியை தொடங்கினார் நித்யா. ஆனால் மெல்ல மெல்ல ஆரம்பித்த பழக்கம்... இறுதியில் குடும்பத்தில் ஒருவராக ஒன்றிப்போனார் நித்யா.
சகலமும் ஆனார் நித்யா
கருணாநிதி முதுகெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது கூடவே மருத்துவமனையில் இருந்து கவனித்து கொண்டார். அந்த நிகழ்விலிருந்து கருணாநிதியுடன் நட்புடன் கலந்த சினேக பாசம் கூடியது. கருணாநிதியின் பெர்சனல் பிஏ, கருணாநிதியின் நிழல், கருணாநிதியின் செல்போன், கருணாநிதியின் சிநேகிதன் என எல்லாமுமாகி விட்டார் நித்யா.
எனது சிநேகிதன் நித்யா
மருத்துவமனையில் தன்னை கண் இமை போல நித்யா காத்து கொண்டது கருணாநிதிக்கு மனதில் பசுமையாக தங்கிவிட்டது. பிடிப்பு மேலோங்கியது. நெருக்கம் கூடியது. தனக்கு உதவி செய்த நித்யா குறித்து கருணாநிதியே டைரியில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். இதை தவிர துணை சபாநாயகர் வீட்டு திருமணத்தில் 'அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த நித்யா தனது சிநேகிதன்' என்று சொல்லி பெருமைப்பட்டும் கொண்டார்.
வெறும் வார்த்தை இல்லை
பல்லாவரத்தில் ஒரு வேட்பாளரை பரிந்துரைக்கும் அளவுக்கு நித்யா கருணாநிதியின் மனதில் உயர்ந்து நின்றார். இப்படி இருந்த நித்யா இன்று அனைத்தையுமே இழந்ததுபோல் உள்ளார். குடும்பத்தார்கள் நித்யாவை தங்களுடன் இணைத்து கொண்டது வெறும் ஒப்புக்கு இல்லை. குடும்ப உறுப்பினர் என்று சொன்னது வெறும் வார்த்தைக்கு இல்லை.
மண்ணை போட்டார்
அந்த உறவின் உன்னதமும், உறவின் ஆழமும் கருணாநிதியை அடக்கம் செய்யும்போது அது வெளிப்பட்டு நின்றது. நல்லடக்கம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் உப்பிட்டு அஞ்சலி செலுத்தினார்களே... அப்போது நித்யாவும் உப்பிட்டு அஞ்சலி செலுத்தினார். குடும்ப உறுப்பினர்கள் கைப்பிடி மண்ணை அள்ளி போட்டார்களே.. அப்போது நித்யாவும் மண்ணை அள்ளி குழியில் போட்டார். இதைவிட ஒரு உறவை வெளிப்படுத்த சான்று வேண்டுமா?
வலியுடனே பயணிப்பார்
கருணாநிதி அனைவரையுமே மதிக்கும் பாங்கு உடையவர் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் உதவிக்கு என்று வந்த ஒருவரை உறவு கொடுத்து தூக்கி நிறுத்த கருணாநிதியால்தான் முடியும். அவர் இன்றி இனி இந்த உலகில் நித்யா என்ன செய்ய போகிறார்? எப்படி ஆசுவாசப்படுத்தி கொள்ள போகிறார்? தெரியவில்லை. எப்படி இருந்தாலும், கருணாநிதியுடன் தன் 24 மணி நேரமும் ஒட்டியும், உறவாடியும், மகிழ்ந்தும், புகழ்ந்தும், நெருங்கியும் உருவாகி வந்த காட்சிகளை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தியே இனி அவரது எதிர்காலம் வலியுடனே பயணிக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.