ஆரம்பத்தில் கோட் சூட்.. பிறகு வேட்டி சட்டை.. கூடவே மஞ்சள் துண்டு.. கருணாநிதியின் அடையாளங்கள்
கருணாநிதி வெள்ளை சட்டை மஞ்சள் துண்டிலேயேதான் வாழ்நாளை கழித்தார்.
Recommended Video
சென்னை: அப்போதெல்லாம் கருணாநிதி டிப்-டாப்பாகத்தான் இருந்திருக்கிறார்.
பழைய போட்டோக்களை எல்லாம் பார்த்தால் சுருள்முடியுடன் கோட் சூட், சஃபாரி என்று கருணாநிதி ஜம்மென்று காணப்படுகிறார். ஆனால் நாளடைவில் மெல்ல மெல்ல தன் ஆடை அலங்காரத்தில் வேட்டி, சட்டைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
பட்டு துணியில் காலர் இல்லாத ஜிப்பா அணிந்தார். அதன்பின்னர் முழுவதுமாக ப்யூர் காட்டனுக்கு மாறிவிட்டார். அதிலும் சட்டையை எடுத்து கொண்டால் எப்போதுமே வெண்ணிற ஆடைதான். வெள்ளை கலர் சட்டை நிரந்தரமானது. ஆனால் கறுப்பு-சிவப்பு கரை வைத்த துண்டுகளும், அவ்வப்போது வண்ண வண்ண சால்வைகளும் அவரது தோளில் வந்து ஒட்டிக் கொண்டு அலங்கரித்துவிட்டு போகும். நீண்ட காலம் வண்ணமய சால்வைகளை தான் கருணாநிதி அணிந்து வந்தார்.
எந்தவித சலனமும் இல்லை
ஆனால் அதெல்லாம் இப்போது நமக்கு நினைப்பிலேயே வருவதில்லை. கருணாநிதி என்றாலே மஞ்சள் துண்டு வந்துதான் கண்முன்னால் நிற்கிறது. எதற்காக இந்த மஞ்சள் துண்டை போட்டுக் கொண்டார் என அவர் இறுதி வரை விளக்கம் அளிக்கவில்லை. அதை பற்றின விமர்சனங்கள் தாறுமாறாக எழுந்தபோதெல்லாம் அதற்கு எந்தவிதமான சலனங்களையும், எதிர்ப்புகளையும் அவர் காட்டவில்லை.
மண்ணுக்குள்ளும் மஞ்சள்துண்டு
அதனை நாத்தீகம் என்றோ, ஆத்திகம் என்றோ எதுவுமே அவர் சொல்லவில்லை. ஆனால் இந்த மஞ்சள் துண்டுதான் மண்ணுக்குள் போகும்வரை அவரது உடலை ஒட்டியே கிடந்தது. ஆரம்ப காலம் தவிர, தன் வாழ்நாளெல்லாம் எளிமையான உடைகளுக்குள்ளே தன்னை புகுத்தி கொண்டார் கருணாநிதி. அவ்வப்போது சில ஸ்பெஷல் ட்ரஸ்ஸில் கருணாநிதி போட்டோக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவைகளும் பரபரப்பாக பேசப்பட்டதே.
லுங்கியில் கருணாநிதி
உதாரணமாக, ஜெயலலிதா கருணாநிதியை விடிகாலையில் கைது செய்யப்படும்போது, அவர் லுங்கியில்தான் இருந்தார். போலீசார் அவரை இழுத்து கொண்டு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அப்போது சிறை வாசலில் இந்த லுங்கியுடன் தான் 1 மணி நேரம் தரையில் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தினார். தாம் ஒரு மாபெரும் தலைவர், ஊர், உலகமே பார்க்கிறதே என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லையே?!!
கைதியின் உடை
சிறையிலே அடைக்கப்பட்டதும், கைதியின் உடையையும் அணியவும் செய்தார். அவ்வளவு ஏன், சமீபத்தில் "கோ பேக் மோடி" சம்பவத்தின்போது அனைவரும் கருப்பு கொடி, கருப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக முடிவெடுத்தது. அப்போது கருணாநிதி கருப்பு சட்டை அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்த போட்டோவும் சமூக வலைதளங்களில் வைரலாக வந்தது.
தங்கிவிட்ட மஞ்சள்தான்
இப்படி எப்போதாவது கருணாநிதியின் உடை சற்று மாறினாலும் அதுவும் கவனிக்கப்பட்டுதான் வந்திருக்கிறது. ஆயிரம் இருந்தாலும் மஞ்சள் துண்டு அணிந்த கருணாநிதிதான் நம் மனசுக்குள்ளேயே தங்கிவிட்டார். அதை நம் நினைவுள்ள வரை மறக்க முடியாதே!