ஜனநாயகத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்வோம்: கருணாநிதி
சென்னை: நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் ஜனநாயகத்தை முன்வைத்து திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ரயில் மூலம் சென்னை திரும்பிய கருணாநிதியிடம் ரயில் நிலையத்தில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு கருணாநிதி பதிலளித்தார்.
செய்தியாளர்: திருவாரூர் தொகுதியின் மண்ணின் மைந்தர் நீங்கள்! இரண்டு நாள் சுற்றுப் பயணம் நடத்தி விட்டு வந்திருக்கிறீர்கள். இந்தச் சுற்றுப் பயணம் எப்படி அமைந்தது?
கருணாநிதி: என்னுடைய சுற்றுப் பயணம் வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்தது.
செய்தியாளர்: வாக்காளர் பட்டியலில் 40 லட்சம் போலி வாக்காளர் கள் சேர்க்கப்பட்டிருப்பதாக சொல்லியிருந்தீர்கள். தேர்தல் ஆணையும் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: போலி வாக்காளர் சேர்க்கப்பட்டிருப்பது பற்றி தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தியாளர்: அ.தி.மு.க. இப்போதே பணப் பட்டுவாடா செய்யும் பணியில் ஈடுபட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறதே?
கருணாநிதி: சொல்லப்படுவதற்கெல்லாம் பதில் கூறக் கூடாது.
செய்தியாளர்: உங்களுடைய தேர்தல் பிரச்சாரம் எதை மையமாக வைத்து இருக்கும்?
கருணாநிதி: ஜனநாயகத்தை.