தமிழகத்தில் 'துக்ளக் தர்பார்' ஆட்சியை கண்கூடாகப் பார்க்கிறோம்: கருணாநிதி காட்டம்
சென்னை: தமிழகத்தில் துக்ளக் தர்பார் ஆட்சி நடப்பதாக பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று 1400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, தமிழக அரசுடன் குஜராத் அதானி குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறதாமே என்ற கேள்விக்கு, கடந்த 16-6-2015 அன்று "முரசொலி" கேள்வி பதில் பகுதியில், நான் பதில் அளிக்கும்போது, "பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், மிகப் பெரிய செல்வந்தருமான அதானிக்குச் சொந்தமான குழுமம், தமிழகத்தில் 1400 கோடி ரூபாய் மதிப்பில் 200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளி வந்துள்ளது.
|
அதானி ஒப்பந்தமும் ஜெ. விடுதலையும்
இதையும் ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்துவதற்கான பேச்சு வார்த்தைகளும் அ.தி.மு.க. அரசுடன் நடைபெற்று வருகிறதாம். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கின் மேல் முறையீட்டில் ஜெயலலிதா பெற்றிருக்கும் விடுதலைக்கும், அதானியின் இந்தச் சூரிய மின் சக்தி நிலைய ஒப்பந்தத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாக யாரோ சிலர் கூறினால், அதில் உண்மை என்ன என்பது நமக்குத் தெரியாது!" என்று பதில் அளித்திருந்தேன்.
ராமதாஸ் அறிக்கை
இதைத் தொடர்ந்து, பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ் அவர்கள் 17ஆம் தேதி விடுத்த அறிக்கையில் சூரிய ஒளி மின்சாரத்தில், அதானி நிறுவனத்துக்காக விதி முறை மீறல் நடைபெற்றதாக விரிவாகத் தெரிவித்திருந்தார்.
விளக்கம் அளிக்காத தமிழக அரசு
மிக முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து, நான் விடுத்த அறிக்கைக்கோ, டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்த அறிக்கைக்கோ தமிழக அரசின் சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ, மின் துறை அமைச்சர் சார்பிலோ ஏதாவது விளக்கம் கூறப்பட்டதா என்றால் இல்லவே இல்லை. இதிலிருந்தே, அரசிடம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க எதுவுமில்லை என்பதும், குற்றச்சாட்டுகளில் அடிப்படை உண்மைகள் உள்ளன என்பதும் ஊர்ஜிதமாயிற்று.
இப்தார் விருந்து
ஜெயலலிதா இஸ்லாமியப் பெருமக்களுக்கு 1-7-2015 அன்று இஃப்தார் விருந்து அளிக்கப் போவதாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதற்காக வழியெங்கும் ஆடம்பர அலங்கார வரவேற்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஜெயலலிதாவே அழைப்பு விடுத்திருந்ததால், இஸ்லாமியப் பெருமக்களும், தோழமைக் கட்சியினரும் கூட விருந்துக்கு வருகை தந்தார்கள்.
ஜெ. போகலை ஏன்?
ஆனால் அவர்களை யெல்லாம் யார் விருந்துக்கு அழைத்தார்களோ, அந்த ஜெயலலிதா நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கே வரவில்லை. உடல் நலக் குறைவு காரணமாக அவர் விருந்துக்கு வரவில்லை என்று கடைசி நேரத்தில் கூறப்பட்டுள்ளது. முதல் அமைச்சருக்கு உடல் நலக் குறைவு என்றால் அலட்சியப்படுத்தப்படக் கூடியதா? அதுபற்றிய விவரம் என்ன என்று முறைப்படி அரசு அறிவிக்க வேண்டாமா? பொதுமக்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள் அல்லவா
ஜெயலலிதா இஃப்தார் நிகழ்ச்சிக்கு வராமல் இருந்த அதே நாளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 40 மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கியதாக ஒரு செய்தி வந்துள்ளது.
மாணவர்களை திருப்பி அனுப்பி...
அதிலே கூட ஒரு சிலருக்கு மட்டும் அவைகளை வழங்கி விட்டு 958 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்ற போதும் பரிசுத் தொகையும், சான்றிதழும் முதல்வர் கையால் வழங்கப்படவில்லையாம். கடந்த ஆண்டும் இது போலவே தான் அந்த மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.
இந்த ஆண்டும் கூட கடந்த 25-ந் தேதியன்று இவைகளை வழங்கப் போவதாக அந்த மாணவர்கள் அழைக்கப்பட்டு, அன்று வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார்களாம்.
ஏமாந்த அதிமுகவினர்..
இன்னும் பரிதாபம்! இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் அந்தத் தொகுதியிலே பாடுபட்ட அ.தி.மு.க. தோழர்கள், அவர் வெற்றி பெற்றதும் நேரிலே நன்றி கூறுவார், நேரில் பார்த்த பிறகு வீடு திரும்பலாம் என்ற நப்பாசையோடு, அவர் வீட்டு வாசலில், போயஸ் கார்டன் முன்பு மணிக் கணக்கிலே கால்கடுக்கக் காத்திருந்திருந்திருக்கிறார்கள்.
ஆனால் கடைசி வரை ஜெயலலிதா வெளியே வரவும் இல்லை. நெடுநேரமாகக் காத்திருந்தவர்களைப் பார்க்கவும் இல்லை. பரிதாபத்திற்குரிய அந்தத் தோழர்களும், மகளிரும் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார்கள்.
தவறுகள் சர்வ சாதாரணமாக..
இப்படி அடுக்கடுக்கான தவறுகளும், யாரும் எதிர்பாராத நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுவதைக் காணும்போது, தமிழக அரசில் என்ன நடைபெறுகிறது, எப்படிப்பட்ட தவறுகள், முறைகேடுகள் எல்லாம் கேட்பாரின்றி சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
|
துக்ளக் தர்பார்
"துக்ளக் தர்பார்" என்று கேள்விப் பட்டிருக்கிறோம். கண் கூடாகப் பார்த்ததில்லை அல்லவா? அதற்காக இப்படிப்பட்ட திடுக்கிடும் திருப்பங்களும், திகைக்க வைக்கும் மர்மங்களும் நிறைந்த ஒரு ஆட்சியை தமிழகத்திலே அ.தி.மு.க. நடத்திக் காட்டுகிறது போலும்!
ஏதோ ஒருசில இடங்களில் மட்டும் தவறுகள் நடைபெற்றால் அவற்றைக் களைய முயற்சிக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக நடப்பதனைத்தும் தவறுகளின் சாகர சங்கமம் என்கிற போது என்ன செய்வது? எதைக் கூறுவது? எதை விடுவது?
இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.