சேது திட்டத்தில் அண்ணாவின் கனவை ஜெயலலிதா அரசு புறக்கணிக்கிறது: கருணாநிதி
இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சேதுசமுத்திரத் திட்டத்திற்காக 1967ஆம் ஆண்டு அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தாரையும், தமிழ்நாட்டு மக்களையும் பார்த்து விடுத்த வேண்டுகோள், சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.
அண்ணாவின் அந்த விருப்பத்தை நிறைவேற்ற, அந்தக் கனவை நனவாக்க, முயற்சிகள் எடுத்துக் கொண்டு, திராவிட இயக்கத்தாராகிய நாங்கள் பாடுபடும்போது, இன்றைக்கு இருக்கின்ற அரசு, ஏற்கனவே ஒருமுறை இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை சென்று தடை கோரியிருக்கிறது.
திரும்பவும் இப்போது நான் கேள்விப்படுகிறேன். இரண்டாவது முறையாகவும், ஏற்கனவே தாங்கள் சொல்லவிட்டுப்போன விஷயங்களைச் சொல்லுகிறோம் என்று சொல்லி, சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு முறையீடு செய்திருக்கிறது.
அண்ணா அவர்களின் எண்ணங்களை, தமிழ்நாட்டு மக்களுடைய தேவைகளை இந்த ஆட்சி எந்த அளவுக்குப் புறக்கணிக்க முற்படுகிறது என்பதற்கு இதுவே தக்க அடையாளம்" என்றார்.