யாருடைய ஆட்சியில் கடன்சுமை 3 ஆயிரம் கோடியாக உயர்ந்தது? – ஓ.பி.எஸ்ஸுக்கு கருணாநிதி கேள்வி
சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கடன் சுமை 3 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், "அம்மாவின் வரலாற்றுச் சாதனையால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு என்று தமிழகச் சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வியந்து கூறியுள்ளார்.
ஒரு அரசு பொதுக் கடன் வாங்குவது தவறல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தி.மு.க ஆட்சியில் கடன் பெற்ற போது அ.தி.மு.க தலைவி என்னவெல்லாம் பேசினார்? தி.மு.க அரசு கடன் வாங்கினால் தவறு, அ.தி.மு.க அரசு கடன் பெற்றால் மட்டும் உலக நாடுகளில் வழக்கமான நடைமுறையா?
தி.மு.கழக ஆட்சியின் போது பேரவையில் பேசிய ஜெயலலிதா என்ன சொன்னார்? "தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தக் கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது" என்று சொன்னாரா? இல்லையா?
"2015-2016 நிதி ஆண்டினுடைய இறுதியில் தமிழக அரசின் மொத்தக் கடன் அளவு 2,11,483 கோடி. மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவிகிதம் வரை கடன் பெறலாம், ஆனால் நாங்கள் 19.24 சதவிகிதம் தான் கடன் வாங்கியிருக்கிறோம்" என்று முதல்வர் கூறுகிறார்.
2011-2012ஆம் ஆண்டில் 19.84 சதவிகிதமாக இருந்த கடன் அளவை, 2014-2015ஆம் ஆண்டு இறுதியில் 19.21 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது, கடன் அளவைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான வாதமாகும் என்று பன்னீர்செல்வம் பேரவையில் சொல்லியிருக்கிறார்.
அதாவது தி.மு. க ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது, தற்போது 2 இலட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அந்தக் கடன் உயர்ந்திருக்கிறது. ஆனால் அப்படிச் சொன்னால் உண்மை உலகுக்குத் தெரிந்து விடுமென முதல்வர் பன்னீர்செல்வம் சாமர்த்தியமாகச் சொல்கிறார்.
இரண்டாவதாகப் பன்னீர்செல்வம் கூறியிருப்பது, 2014-2015ஆம் ஆண்டுக்கு திருப்பி செலுத்த வேண்டிய வட்டி 14,755 கோடி ரூபாய். 2015-2016ஆம் ஆண்டில் திருப்பி செலுத்த வேண்டிய வட்டி 17,139 கோடி ரூபாய். இது மாநிலத்தின் வருவாய் வரவில் 12.01 சதவிகிதம். அம்மா தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றபோது இந்த அளவு 18.67 சதவிகிதமாக இருந்ததை, 12.01 சதவிகிதமாகக் குறைத்து விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கடனைக் குறைத்து விட்டீர்களா என்றால், வருவாய் வரவில் உள்ள சதவிகிதத்தைக் குறைத்து விட்டோம் என்பது பதிலா? கடந்த ஆண்டு திருப்பி செலுத்த வேண்டிய வட்டியின் அளவை விட இந்த ஆண்டு வட்டியின் அளவு 3000 கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஆனாலும் முதல்வர் அதைச் சமாளிக்க எண்ணுகிறார்.
"திவாலாகும் நிலை ஒன்றும் இந்த அரசுக்கு ஒரு போதும் ஏற்படாது" என்று பேரவையில் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இது உண்மையா? அப்படியென்றால் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இந்தியப் பிரதமருக்கு கடந்த டிசம்பரில் எழுதிய கடிதத்தில், "தமிழ்நாடு ஏற்கனவே கடும்நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. தமிழக அரசுக்குக் குறிப்பிட்ட வருவாய் ஆதாரங்கள் மட்டுமே உள்ளதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, கூடுதலாக எந்தவொரு நிதிச்சுமையையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்வது என்பது மிக கடினமானதாகும்" என்று தெரிவித்திருந்தாரே. அது தவறான தகவலா?
மேலும் முதல்வர் பன்னீர்செல்வம், 2011-12ஆம் ஆண்டுக் கணக்குப்படி மாநிலத்தினுடைய சொந்த வரி வருவாய், 59,517.30 கோடி ரூபாயாக இருந்தது, 2014-2015ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டின்படி 85,769.27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
2014-2015ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டைக் குறிப்பிட்ட முதல்வர், 2014-2015ஆம் ஆண்டின் திட்ட மதிப்பீட்டை ஏன் கூறவில்லை? 2014-2015ஆம் ஆண்டு வரவு-செலவு திட்ட மதிப்பீட்டின்படி, மாநில அரசின் சொந்த வரி வருவாயாகக் குறிப்பிட்டிருப்பது 91,835.35 கோடி ரூபாய். அந்தத் தொகை தான் திருத்த மதிப்பீட்டில் 85,772.71 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதை அப்படியே சொன்னால் சாயம் வெளுத்து விடுமென்று இதை கவனமாக மறைத்து, திருத்த மதிப்பீட்டை மட்டும் முதல்வரிடம் கொடுத்துப் படிக்கச் செய்திருக்கிறார்கள்! அது போலவே 2014-2015ஆம் ஆண்டுக்கான மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்- மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 9.75 சதவிகிதம் என்பது, 2015-2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 8.74 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பது தான் உண்மை.
வருவாய் பற்றி முதல்வர் கூறிய காரணத்தால் கூறுகிறேன். முத்திரைத் தாள் தீர்வை மற்றும் பதிவு மூலமாக 2014-2015இல் கடந்த ஆண்டு 10,470.18 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்பட்டது. இது திருத்த மதிப்பீட்டில் 9,330 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
அது போலவே மோட்டார் வாகன வரி வருவாய் 2014-2015ஆம் ஆண்டில் 5,147.14 கோடி ரூபாயாக இருக்குமென்று நிர்ணயித்திருந்தார்கள். இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதுவும் 4,882.53 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.