கருணாநிதிக்கு ராக்கி கயிறு கட்டிய வட இந்திய பெண்கள்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் வசிக்கும் வட இந்தியப் பெண்கள் ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடினர்.
வட இந்தியர்களின் "ஷ்ராவன்" மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தன்று ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. இது நேற்று கொண்டாடப்பட்டது.
ரக்ஷா பந்தன் விழாவையொட்டி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து, நெல், கோதுமை முதலான தானியங்கள், இனிப்புகள், பணம், சந்தனம், குங்குமம் வைத்து விளக்கேற்றுவார்கள்.
சகோதரிகள், தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கயிற்றை கட்டி தங்களின் அன்பை வெளிப்படுத்துவார்கள். இதற்கு பிரதிபலனாக, சகோதரர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சகோதரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பதாக உறுதி அளிப்பார்கள்.
சகோதர-சகோதரிகள் அருகில் இல்லை என்றாலும், சகோதரர்கள் இருக்கும் பகுதிகளுக்கு சகோதரிகள் ராக்கி கயிறுகளை தபால் மற்றும் கூரியர் மூலம் அனுப்பிவைக்கின்றனர். பதிலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகளை அனுப்பி வைக்கின்றனர்.
சென்னை சவுகார்பேட்டை பகுதிகளில் நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., மம்தா பானர்ஜி உருவங்கள் பொறிக்கப்பட்ட ராக்கி கயிறுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
திமுக தலைவர் கருணாநிதிக்கு வட இந்தியப் பெண்கள் பலர் திரண்டு வந்து ராக்கி கயிறு கட்டி வாழ்த்து பெற்றனர். அதேபோல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் பல பெண்கள் ராக்கி கயிறு கட்டினர்.