மேகதாது விவகாரம்... கர்நாடகா முதல்வருக்கு பதிலே சொல்லாத ஜெ.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 5,912 கோடி ரூபாய்ச் செலவில் புதிதாக அணை ஒன்றைக் கட்ட கர்நாடகம் முயற்சி செய்து வருகிறது. அந்த அணை கட்டப்பட்டு விட்டால், தமிழ்நாட்டுக்கு இப்போது கிடைக்கும் சிறிதளவு தண்ணீர் கூட கிடைக்காது என்பதால், மேகதாது அணை திட்டத்துக்கு தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றன.
பெங்களூருவில் 15-8-2016 அன்று சுதந்திர தின விழாவில் பேசிய கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணைக்கட்டுத் திட்டம் பற்றி, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதென்றும், மழைக் காலத்தில் கடலில் கலக்கும் உபரி நீரைப் பயன்படுத்த இந்த அணை கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது என்றும், இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்கப்படும் என்றும் பேசினார்.
கர்நாடக மாநில முதல்வரின் பேச்சை ஏடுகளில் படித்ததும் நானும், எதிர்க் கட்சித் தலைவர்களும் தான் பதில் சொன்னோம். ஆனால் நமது முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொன்னார்? உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகச் சொன்னார்.
காவிரி ஆற்றில் மேகதாதுவில் அணைகள் கட்டுவது பற்றி கடந்த டிசம்பர் மாதமே, அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா "காவிரி டெல்டா பகுதியில் உள்ள மேகதாதுவில் அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்ட மிட்டுள்ளது. இது தொடர்பாக திட்ட வரைவு தயாரிக்க உலகளாவிய டெண்டர் விடப்பட்டுள்ளது" என்றெல்லாம் கூறி, ஏடுகளிலே அந்தச் செய்தியும் வந்தது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால், காவிரியில் மேகதாது என்ற இடத்தில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இரண்டு அணைகளைக் கட்டப் போவதாகவும், இதன் தொடர்ச்சியாக கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி ஆகிய அணைகளுக்குக் கீழே நான்கு தடுப்பு அணைகள் கட்டி, பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளப் போவதாகவும், காவிரி கர்நாடக மாநிலத்திற்குள்ளே ஓடும்போது அதைப் பயன்படுத்திடக் கர்நாடகத்திற்கு முழு உரிமை உள்ளதால் தமிழக அரசோ, தமிழ்நாட்டு விவசாயிகளோ இதைத் தடுத்திட முடியாது என்றும் கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கடந்த ஆண்டு நவம்பரில் தெரிவித்த போதே, அதைப் பற்றி நான் விரிவான கண்டன அறிக்கை ஒன்றை விடுத்திருந்தேன்.