கருணாநிதி வாஜ்பாய் நட்பில் மலர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி!
Recommended Video
-ராஜாளி
சென்னை: 1998-ம் ஆண்டு பாஜக அரசில் பங்கு பெற்ற அதிமுக, தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார். அதை பாஜக நிறைவேற்றாததால் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார். அதனால் பாஜக அரசு கவிழ்ந்தது. இந்நிலையில் அண்ணா பிறந்த நாள் விழாப் பேரணி நடத்தியது ம.தி.மு.க., இந்தப் பேரணியில் கலந்துகொள்ள சென்னை வந்த வாஜ்பாய் அ.தி.மு.க. உறுதியான, நம்பத் தகுந்த கூட்டாளியா என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும் என்று கூறியதோடு மத்திய ஆட்சிக்கு தி.மு.க. போன்ற கட்சிகள் ஆதரவு தர முன்வந்தால், அதை நாங்கள் ஏற்போம், ஆதரவு வேண்டாம் என்று கூறமாட்டோம், ஆதரவு பற்றி தி.மு.க.வுடன் நாங்கள் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மதச்சார்பற்ற கட்சி என்று பா.ஜ.க. நிரூபித்தால், அதற்கு ஆதரவு தரத் தயார் என்று கருணாநிதி கூறியுள்ளார்" என்றெல்லாம் தெரிவித்திருந்தார்
1999-ம் ஆண்டு ஏப்ரல் 15 -ம் தேதி மக்களவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாஜ்பாய் முன்மொழிகிறார். அப்போது திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறன் அ.தி.மு.க. ஆதரவோடு நடைபெறும் ஆட்சி மாநிலத்தின் நலனுக்கும், தேசத்தின் நலனுக்கும் எதிரானது. எனவே தற்போதைய அரசு தொடர்வதை நாங்கள் ஆதரிக்கிறோம் என கூறி பாஜக அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இப்படி திமுக பாஜகவுக்கு ஆதரவு அளித்தது குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது ஜெயலலிதாவின் ஊழலை விட மதவாதம் என்பது கொடுமையானதல்ல; அதனால் மதவாதம் இனிமையானது என்று பொருள் அல்ல. பாம்பை விட மோசம் என்று ஒரு பெண்ணையோ ஆணையோ சொன்னால், பாம்பு நல்லது என்று அர்த்தமா? பாம்புக்கும் விஷம் உண்டு என்றுதான் அர்த்தம்" என்று பதில் கூறினார்.
கருணாநிதிக்கு வாஜ்பாய் மீது நல்ல அபிப்பிராயமும் மரியாதையும் எப்போதும் இருந்தது உண்டு. வாஜ்பாய் ஒரு நல்ல மனிதர் என்று எப்போதும் குறிப்பிடும் கருணாநிதி 2-6-1999-ம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் பாஜகவுடன் கூட்டணி சேருவது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கிறார். பின்னர் அந்தப் பொதுக்குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் பாஜக, திமுக கூட்டணி முடிவாகிறது.
இந்தக் கூட்டணி உருவானதுமே சிறுபானமையினர் மத்தியில் ஒரு சிறு சலசலப்பு உருவாகிறது. இந்த சலசலப்புக்கும் அந்த பொதுக்குழு தீர்வு ஒன்றை கூறியது. எப்போதும் போல சிறுபான்மை சமூகத்திற்கு திமுக தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவிக்கிறது.
அதனைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டு மே மாதம் கருணாநிதியை பாஜக தமிழக தலைவர்களுள் ஒருவரான ரங்கராஜன் குமாரமங்கலம் சந்தித்து பேசுகிறார். பின்னர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் ஆதரவளித்த கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகிறது. அன்றைய தினம் அத்வானி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவும் உருவாக்கப்படுகிறது. இப்படியாக கருணாநிதி, வாஜ்பாய் நட்பு காரணமாக உருவான தேசிய ஜனநாயக கூட்டணி அதே ஆண்டு செப்டம்பர் 5 மற்றும் 11 ஆகிய நாட்களில் நடைபெற்ற தேர்தலை சந்திக்கிறது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி 26 இடங்களை கைப்பற்ற இந்திய அளவில் 303 இடங்களைப் பெற்று வெற்றி பெறுகிறது. இந்தக் கூட்டணி அதன் ஆயுள்காலமான 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்தது. காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவர் பிரதமராக ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் பிரதமர் வாஜ்பாய் அதவும் தமிழகத்தை சேர்ந்த திமுகவின் ஆதரவில் என்பது குறிப்பிடத் தகுந்தது.
வாஜ்பாய், கருணாநிதி நட்புக்கு அடையாளமாக் இன்னொரு சம்பவத்தை கூறலாம். 1999 -ம் ஆண்டு ஜூலை மாதம் - 7 ம் நாள் கார்கில் பிரச்சனை குறித்து விவாதிக்க முதல்வர்கள் மாநாடு கூடுகிறது. இதில் கலந்து கொண்ட கருணாநிதி தமிழக மக்களின் சார்பாக 15 கோடி நிதியை காசோலையாக வழங்குகிறார். இதைப் பெற்றுக் கொண்ட வாஜ்பாய் கருணாநிதியிடம் சிரித்துக் கொண்டே இதை முதல் தவணையாக வைத்துக் கொள்கிறேன் என்கிறார். அப்படியே ஏற்றுக் கொண்ட கருணாநிதி நாட்டுரிமை காப்பதில் தமிழக மக்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறி இரண்டாவது தவணையாக ஆகஸ்ட் மாதம் 16- ம் தேதி 25 கோடி ரூபாயை நிதியாக வழங்குகிறார். மூன்றாவது தவணையாக அதே மாதம் 21 ம் தேதி சென்னைக்கு வந்த வாஜ்பாயிடம் 10 கோடிக்கான காசோலையை வழங்கி இந்தியாவிலேயே அதிக நிதியை கார்கில் போர் நிவாரணத்திற்காக வழங்குகிறார். இது இருவருக்கும் இடையிலான சிறந்த நட்புக்கு உதாரணமாக இன்றளவும் பேசப்படுகிறது