அண்ணன் தந்த மோதிரத்துடன் அவரை சென்றடைந்தார் கருணாநிதி
பெரிதும் நேசித்த அண்ணாவிடம் சென்றடைந்தார் கருணாநிதி.
Recommended Video
சென்னை: தாம் வாழ்நாளில் பெரிதும் நேசித்த அண்ணாவிடம் கருணாநிதி சென்றடைந்தார். தன் உயிர்பிரியும் நேரத்திலும் கூட அண்ணா அளித்த அந்த பொருளை தம்மிடமே கெட்டியாக வைத்திருந்தார் கருணாநிதி.
தி.மு.க. தேர்தல் நெருங்கி விட்டது. கையில் பணம் இல்லாமல் தவித்தார் அறிஞர் அண்ணா. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சத்தை வசூலித்துத் தந்தார் கருணாநிதி. இதனை பாராட்டி, அண்ணா, கருணாநிதிக்கு ஒரு கணையாழி (மோதிரத்தை) அணிவித்தார். இந்த மோதிரத்தை கருணாநிதி பெரிதும் மதித்தார். தன் வாழ்நாளில் அந்த மோதிரத்தை மட்டும் அவர் கழட்டியதே இல்லையாம்.
இதுகுறித்து பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு தயாளு அம்மாள் கடந்த 2000-ஆம் ஆண்டு ஒரு பேட்டி அளித்தபோது கூறுகையில், "அறிஞர் அண்ணா போட்ட மோதிரம் தான் இப்போது வரை அவரது விரலில் இருக்கு, இது தவிர வேறு யாரோ ஒரு சமயம் கொடுத்த பரிசான ஒரேயொரு பவள மோதிரம் மட்டும் போட்டிருக்கிறார். அவருக்கு நிறைய பேர் மோதித்தை பரிசாக கொடுத்துள்ளனர். ஆனால் அவர் எதையுமே போட்டதில்லை" என்றார்.
எப்போதுமே தனது கட்சியினரோ அல்லது நண்பர்களோ கூடவே இருக்க வேண்டும் என்று விரும்புவர் கருணாநிதி. அவர் இருக்கும் இடம் எப்போதுமே அரட்டைதான்... சிரிப்பலைதான்... எனக்கு விரோதியே தனிமைதான் என்று அடிக்கடி கூறும் கருணாநிதி... இன்று அந்த விரோதியிடமே அடைக்கலமாகி விட்டார். இனி மெரினாவின் மெளனமான உப்புக் காற்றுடன் கருணாநிதியின் தமிழ் கொஞ்சி விளையாடும்.. ஆனால் நாம் எப்போது அதை கேட்பது?