'குளச்சல் துறைமுகத்தால் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு கூடாது'- கருணாநிதி
கேள்வி: குளச்சல் துறைமுகம் அமைக்க மத்திய அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்கு அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறதே?
பதில்: தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றுதான் குளச்சல் துறைமுகம். தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் ஆகிய 3 பெரிய துறைமுகங்கள் தான் உள்ளன. சென்னை, தூத்துக்குடியில் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன.
இந்த மூன்று துறைமுகங்களிலும் அதி நவீன கப்பல்கள் வந்து செல்லும் வகையில், கட்ட மைப்புகள் இல்லாததால், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகள், கொழும்பு, சிங்கப்பூர் துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்துதான் பிற நாடுகளுக்கு அனுப்ப முடியும்.
இறக்குமதியும் அவ்வாறே நடந்து வருகிறது. இதுபோன்று அல்லாமல், சர்வதேசக் கப்பல்களும் நேரடியாக வந்து செல்லும் வகையில், குளச்சலில் 21 ஆயிரம் கோடி ரூபாயில் வர்த்தகத் துறைமுகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.
ஆனால் இந்தத் திட்டம் வந்தால் மீனவர்கள் இடம் பெயர வேண்டி வரும்; வாழ்வாதாரம் பாதிப்படையும்; 25 கிலோ மீட்டர் தொலைவில் கேரளத்தில் விழிஞ்சம் வர்த்தகத் துறைமுகம் உள்ள போது, அருகே இன்னொரு வர்த்தகத் துறைமுகம் தேவையில்லை என்று பல மீனவ அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலெக்டரைச் சந்தித்து, இணையத்தில் துறைமுகத்தை அமைக்கக்கூடாது என்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் குளச்சல் அருகே இணையத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாயில் வர்த்தகத் துறைமுகம் அமைப்பதற்கும், முதற்கட்டப் பணியை 6,575 கோடி ரூபாயில் மேற்கொள்ளவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
"குளச்சல் துறைமுகம்" தமிழகத்தின் நீண்ட கால எதிர்பார்ப்பு என்பதால் இந்தத் திட்டத்தை வரவேற்கும் அதே நேரத்தில், அந்த மாவட்டத்தில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த விதமான பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில், அவர்களின் பிரதிநிதிகளை அரசின் சார்பில் அழைத்துப் பேசி, அவர்களுக்கு தக்கப் பாதுகாப்பு அளித்து அனைவரும் ஒருங்கிணைந்து வரவேற்கத்தக்க நிலையில் இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.