அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவிக்க கருணாநிதி வலியுறுத்தல்
கேள்வி: அ.தி.மு.க. அரசின் சார்பாக சிறு, குறு விவசாயிகளின் 5,780 கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதே?
பதில்:- 2016, மே மாதம் 23ஆம் தேதி ஜெயலலிதா முதல் அமைச்சராகப் பதவியேற்றதும், முதன் முதலாகக் கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளில் ஒன்றுதான், விவசாயிகளின் கடன் தள்ளுபடி பற்றிய பிரச்சினை. ஒரு மாதம் கழித்து அதற்கான அரசாணைதான் இப்போது பிறப்பிக்கப் பட்டுள்ளது. தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையிலே கூட "சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்" என்று தான் அறிவித்திருந்தோம்.
ஆனால் அதற்குப் பிறகு என்னைச் சந்தித்த விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், சிறு குறு விவசாயிகள் பெற்ற கடன்களை மட்டும் தள்ளுபடி செய்தால், பெரும்பான்மையினருக்குப் பயன் விளைவிக்காது; விவசாயிகளை பெரிய விவசாயிகள், சிறுகுறு விவசாயிகள் என்று பேதப்படுத்த வேண்டாம்;
அதனால் எல்லா விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அதனையேற்று 11-5-2016 அன்று திருவாரூர் தொகுதியிலே தேர்தல் பிரச்சாரத்தில் நான் பேசும்போது, "விவசாய சங்கத் தலைவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இப்போது அறிவிக்கிறேன். எல்லா விவசாயிகளும் பெற்றுள்ள பயிர்க் கடன் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்தேன்.
ஆனால் தற்போது அ.தி.மு.க. அரசு பெரிய விவசாயிகளின் கடன்களைப் பற்றிப் பரிசீலனை செய்யாமல், சிறு, குறு விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வதாக அரசாணை பிறப்பித்துள்ளது. ஒருவேளை விரைவில் வெளிவரவிருக்கின்ற தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பார்களோ என்னவோ? ஆனால் அவ்வாறு தெளிவாக அறிவிக்க வேண்டுமென்று விவசாயிகளின் சார்பில் வலியுறுத்துகிறேன்.