சென்னை நகரம் இருக்கும்வரை கருணாநிதி பெயரை அது சொல்லும்.. டி.ராஜா நெகிழ்ச்சி
Recommended Video
சென்னை: சென்னை நகரம் இருக்கும்வரை கருணாநிதி பெயரை அது சொல்லிக்கொண்டிருக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், டி.ராஜா தெரிவித்தார்.
'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற பெயரில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
அதில் டி.ராஜா பேசியதாவது: ஸ்டாலின் அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டா என்று கேட்டது தனி மனிதக் குரல் அல்ல, அது தமிழ்ச் சமுதாயத்தின் குரல்.
கருணாநிதி திமுக என்ற கட்சிக்குச் சொந்தமானவர் அல்ல. கருணாநிதி தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொந்தமானவர். கருணாநிதி இந்தியா முழுவதற்கும் சொந்தமானவர். கருணாநிதி மானுடம் முழுவதற்கும் சொந்தமானவர். மானுடத்தின் சமத்துவத்திற்காக, சகோதரத்துதிற்காக போராடியவர், சமூக நீதிக்காக போராடிய மாபெரும் போராளி கருணாநிதி.
தேவகவுடா பிரதமராக இருந்தபோது, தோழர் இந்திரஜித் உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, கருணாநிதியிடம் இருந்து மெட்ராஸ் என்பதை சென்னை என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வந்தது. என்னிடம் அடிக்கடி தொலைபேசியில் அழைத்து, மெட்ராஸ் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கருணாநிதி என்ற பெயரை தமிழிலும், ஆங்கிலத்திலும் வேறு மாதிரி கூப்பிட முடியாது. அதுபோல சென்னைக்கும், தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே பெயர் வைப்பதுதானே நியாயமானது என்று எண்ணிடம் தர்க்கமாக எடுத்து கூறினார்.
சென்னை நகரம் இருக்கும்வரை கருணாநிதி பெயரை அது சொல்லிக்கொண்டிருக்கும். கருணாநிதி தமிழர்களுக்காகவும், இந்திய ஜனநாயகத்திற்கும், மாநில சுயாட்சிக்காகவும் போராடிய மாபெரும் தலைவர். அவர் பிறந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் கிடைத்துள்ள பெருமை. கருணாநிதி போன்ற மாபெரும் போராளிகளுக்கு மரணமே இல்லை. என்றென்றும் அவர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.
ஸ்டாலின் தனது தோளில் உள்ள சுமையை சுமப்பார் என்று நம்புகிறேன்.