நீண்ட இடைவெளிக்கு பிறகு, தொண்டர்களை நாளை சந்திக்கிறார் கருணாநிதி
சென்னை: தைப் பொங்கலையொட்டி, தொண்டர்களை நாளை சந்திக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு என திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. பொங்கல் நாளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது திமுக வழக்கம். இந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, தனது கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை கருணாநிதி நாளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருணாநிதி உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக தொண்டர்களுடன் சந்திப்பு நடத்த முடியவில்லை. பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலும், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருந்ததாக மருத்துவர்கள் கூறியதால் வீட்டிலேயே கருணாநிதி ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில், கருணாநிதி நாளை நீண்ட இடைவெளிக்கு பிறகு, முதல் முறையாக தொண்டர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது திமுக தொண்டர்களுக்கு நிச்சயம் பொங்கல் பரிசாக அமையும் என எதிர்பார்க்கலாம்.