கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார் பூச்சி முருகன்
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பூச்சி முருகன், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு நாசர் தேர்வானார். பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் நடிகர் சங்கத்தின் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் விஷாலின் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நபர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘மிகுந்த பரபரப்போடு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிந்து விட்டது.
இனி வெற்றி பெற்றவர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையோடு இருந்து நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று விரும்புகிறேன். நல்லதொரு மாற்றம், எழுச்சி ஏற்பட்டுள்ளது. வரவேற்கதக்கது' என்றார்.
மேலும், திமுக பொருளாளர் ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள கருணாநிதி, பருப்பு விலை குறித்து மக்களின் கருத்தே என்னுடையதும் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர், ஆந்திரா சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளது, காலம் கடந்த நடவடிக்கை என கருணாநிதி விமர்சித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பூச்சி முருகன் என்னிடம் வாழ்த்து பெற்றபோது !#nadigarsangamelections
Posted by Kalaignar Karunanidhi on Sunday, October 18, 2015
இதனிடையே, நடிகர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பூச்சி முருகன், இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.