"பூனைக்குட்டிவெளியே வந்து விட்டது" - ஜெ. சொத்து பற்றி கருணாநிதி
சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா அவருடைய சொத்து மதிப்பை
அறிவிக்கும் ஒவ்வொரு முறையும், அது இரண்டு மடங்காக உயருகிறது என்று நாளேடுகள் வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள் காட்டி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியுள்ளதாவது...
தந்தை பெரியார் அவர்கள்தான் அடிக்கடி "பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது" என்று கூறுவார்கள். ""இந்து" வெளியிட்டுள்ள செய்தியைப் படித்த போது அதுதான் என்
ஞாபகத்திற்கு வந்தது.
அந்தச் செய்தியின் முதல் பத்தியே, முதலமைச்சர் ஜெயலலிதா அவருடைய சொத்து மதிப்பை அறிவிக்கும் ஒவ்வொரு முறையும், அது இரண்டு மடங்காக உயருகிறது என்று தொடங்குகிறது.
2011ஆம் ஆண்டு அவர் திருவரங்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த போது, அவருடைய சொத்து மதிப்பு 51.40 கோடி ரூபாய்.
2006ஆம் ஆண்டு அவருடைய சொத்து மதிப்பு 24.7 கோடி ரூபாய். ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஜெயலலிதா, 9.80 கோடி ரூபாயை "டெபாசிட்" செய்திருப்பதாகவும், கொடநாடு எஸ்டேட் உட்பட ஐந்து நிறுவனங்களில் 31.68 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறாராம்.
2013-2014ஆம் ஆண்டில் ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரித் துறை ஆவணத்தில், 33.32 இலட்சம் ரூபாய் மட்டுமே வருவாயாக வந்ததாகத் தெரிவித்திருப்பதாக "இந்து" எழுதியிருக்கிறது. (இது 33.32 இலட்சம் ரூபாயா, கோடியா என்பது தெரியவில்லை)
"இந்து" நாளேடு ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு பற்றி மட்டும்
கூறவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்த போது, அந்தத்
தொகுதி எப்படி இருந்தது என்பதையும் எழுதுகிறது.
சாலைகள் அனைத்தும் பளபளக்கின்றன; ஒருசில இடங் களில் மட்டும் தார் காயாததால் வெள்ளிக்கிழமை அன்று காலிலே ஒட்டிக் கொள்ளும் நிலை.
முதல் நாள்தான் சாலைகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.
வேகத் தடைகளில் பல தகர்க்கப்பட்டு சமதளமாக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி செய்யும் பணிகளில் இது மாதிரியான வேகம் இதுவரை கண்டதில்லை. அதிலும் இந்தப் பகுதியில் யாரும் கண்டதில்லை" என்று ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறினார் என்று "இந்து" நாளேடு எழுதியுள்ளது.
இவை அனைத்துக்கும் பாராமுகமாக இருந்து வரும் இந்தியத் தேர்தல் ஆணையம் இனியாவது என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!
இவ்வாறு கருணாநிதி தனது முகநூலில் கருத்தை தெரிவித்துள்ளார்.