சட்டசபையில் ஆளுங்கட்சியினரை துறைவாரியாக அட்டாக் செய்வது எப்படி? திமுக சீனியர்கள் சீரியஸ் ஆலோசனை
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை கொறடா சக்கரபாணி, எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் திமுக தான் தனித்து போட்டியிட்ட தொகுதிகளில் 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதுவரை சட்டசபையில் எந்த எதிர்கட்சிகளுக்கும் இல்லாத பலம் திமுக-வுக்கு உள்ளது. எதிர்கட்சி தலைவராக அக்கட்சியின் பொருளாளரும், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான ஸ்டாலின் உள்ளார்.
நாளை சட்டசபை கூட்டம் தொடங்க உள்ளதால் கூட்டத்தில் திமுகவின் பங்கு, செயால்பாடு உள்ளிட்ட விஷயங்கள் இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைவாரியாக உள்ள அதிமுக அமைச்சர்களுக்கு ஏற்ப அந்தந்த துறையில் உள்ள பிரச்னைகளைக் குறிப்பெடுத்து, அதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்துக்கொள்ளவும் எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வலிமையான எதிர்கட்சி
ஆட்சி அதிகாரத்தில் அமர நூலிழையில் வாய்ப்பை இழந்த திமுக வலிமையான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. 98 தொகுதிகளை வென்ற திமுக கூட்டணியில் காங்கிரஸ் 8ம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1ம், திமுக 89 தொகுதிகளும் வென்றன.
எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இந்நிலையில், நாளை ஜூன் 16 ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டசபை கூடுகிறது. இதையொட்டி, திமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின்
திமுகவின் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி சட்டசபையில் எப்படி செயல்பட வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏக்களிடம் விரிவாக பேசினாராம் ஸ்டாலின்.
புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி
சட்டசபைக்குள் புதிய உறுப்பினர்களாக அடியெடுத்து வைத்துள்ளவர்களுக்கு, இந்தக் கூட்டத்தில் வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
துறைவாரியாக புள்ளி விபரம்
துறைவாரியாக உள்ள அதிமுக அமைச்சர்களுக்கு ஏற்ப திமுக சட்டசபை உறுப்பினர்களை துறைவாரியாகப் பிரித்து, அந்தந்த துறைகளை கவனிக்க வேண்டும். அந்தந்த துறையில் உள்ள பிரச்னைகளைக் குறிப்பெடுத்து, அதற்கான ஆதாரங்களை திரட்டி வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டதாம்.
பேச வேண்டிய பிரச்சினை
துறைரீதியான முறைகேடுகளை சட்டசபைக்குள் எழுப்பவேண்டும் என்பது உள்ளிட்ட சில வழிகாட்டுதல்களை ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தெரியப்படுத்தியிருந்தார். அதுகுறித்தும் இன்றைய கூட்டத்தில் அலசப்பட்டதாக கூறப்படுகிறது.
கருணாநிதி பங்கேற்கவில்லை
எம்.எல்.ஏக்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.