துணை கமிஷனர் என்னுடன் மோத தயாரா? நான் அடிப்பேன்னு முதல்வரே பயப்படுகிறார்..ஏழரையை கூட்டும் கருணாஸ்!
சட்டையை கழற்றி விட்டு என்னுடன் மோத தயாரா என தி நகர் துணை கமிஷனருக்கு எம்எல்ஏ கருணாஸ் சவால் விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: சட்டையை கழற்றி விட்டு என்னுடன் மோத தயாரா என தி நகர் துணை கமிஷனருக்கு எம்எல்ஏ கருணாஸ் சவால் விடுத்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அப்போது தி நகர் துணை கமிஷனர் அரவிந்தனை கடுமையாக விளாசினார்.
அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பதையும் மறந்து சரமாரியாக அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசியதோடு மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார். அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொலை கூட பண்ணு
வள்ளுவர்கோட்டம் ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் பேசியதாவது, இப்போது ஒன்று இரண்டு பேர் சமீபகாலமாக தப்பு செய்கிறார்கள். அதையும் நான் பொதுச் செயலாளரிடம் சொல்லிவிட்டேன். நீ கொலை கூட பண்ணு. சொல்லிட்டு பண்ணு. அதில் நியாயம் இருக்கணும்.
தைரியமாக சொல்லனும்
உன்னை வாழ விடலையா. தொந்தரவு பண்ணுகிறானா. அப்போ கோபம் வரத்தானே செய்யும். கூட்டத்தில் ஒரு ஆளை 10 பேர் கல்ல விட்டுட்டு வர்றது. அது வேற ஆளுதான் பண்ணுவாங்க. நாம அப்படி பண்ணக்கூடாது. யார்றா அடிச்சா கல்லால அப்படின்னு கேட்கும் போது நான் தான் அடிச்சேன்னு துணிச்சலா சொல்லனும்.
அடிப்பேன் என சிஎம் பயப்படுகிறார்
முதல்வர் வருவார் மரியாதை கொடுக்கனும்னு நின்னுக்கிட்டு இருந்தா 100 போலீச போடுறாங்க. என்னயா எதுக்குயா இங்க வந்து நிக்கிறீங்கன்னு கேட்டா, நீங்க வந்து முதல்வரை மறிக்க போறீங்களாம். அடிக்க போறீங்களாம் என்று கூறுகிறார்கள். முதல்வரே நான் அடிப்பேன் என்று பயப்படுகிறார்.
நான் இல்லாமலா உருவானது?
ஆனால் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தேன். என்னை பிடிக்காவிட்டால் கண்டபடி ரிப்போர்ட் போடுவதா? உளவுத்துறை அதிகாரியைப்பார்த்து கேட்கிறேன். இது பாவமில்லையா? நான் பொய்யெல்லாம் சொல்லல. நீங்களே போன் பண்ணி கருணாஸ் இப்படி சொல்றாரே என்று கேளுங்க. அது தான் உண்மை. எடப்பாடி அரசாங்கத்துகிட்ட நாம என்ன சொன்னோம். கூவத்தூரில் இந்த கருணாஸ் இல்லாமயா இந்த அரசாங்கம் உருவானது?
டைட்டா சட்டை கூலிங்கிளாஸ்
கூவத்தூர் இடத்தை காட்டினது இந்த கருணாஸ். அதை மறுக்க முடியுமா?. சாமி படம், சூர்யா படம், சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க இருக்காங்க. அவங்ககிட்ட மேல் அதிகாரிகள் அறிவுரை சொல்லனும்.
குறுநில மன்னர்னு நினைப்பா?
தம்பி இங்க வா நீ வந்து பப்ளிக் சர்வண்ட். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிற தொழிலாளி. முதல்ல மக்களை மதிக்க கத்துக்கோங்க. ரவுடி பசங்க மாதிரி கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு பின்னாடி ரவுடி மாதிரி பத்து பேரை வச்சுகிட்டு சுத்துனா மனதில் என்ன ஜமீன்தார் என்று நினைப்பா.. இல்ல குறுநில மன்னர்னு நினைப்பா.
பிரியாணிக்கு செலவு
சாலிகிராமத்தில் தான் நாங்க சாவோம். சாலி கிராமம் எங்க ஊர். எங்க வீடு. நீ இன்னைக்கு வருவ நாளைக்கு போவ. சின்ன பய வயசு கம்மி. நல்ல ஆளு தமிழ்காரர். நல்லா வரனும்னு நாங்க நினைக்கிறோம். நீ பேட்டில, கத்தியை காட்டி காசு கேக்குறோம்னு சொல்ற. ஒரு நாளைக்கு சரக்குக்கு ஒரு லட்சம் செலவு பண்றோம். வர்றவன் போறவனுக்கு பிரியாணி ஆக்கி போடுதற்கு அவ்வளவு செலவு பண்றோம்.
டவுசர கழட்டிருப்பேன்
அது எங்க பாரம்பரியம். நாங்க சாமிக்கே சாராய பாட்டில் வைத்து சாமி கும்பிடுகிறவங்க. ஐபிஎஸ் படித்த படிப்புக்கே களங்கம் விளைவிக்கக்கூடிய கீழ்த்தரமான ஒரு செயலை செய்தவர் இந்த டிசி அரவிந்த். நான் அன்னைக்கே அவர் டவுசர கழட்டிருப்பேன். அவர் மேல நடவடிக்கை எடுப்பதை வேண்டாம் என்று சொன்னவன்.
நீயா நானான்னு பார்க்கலாம்
ஒரு நல்ல அதிகாரி. நேர்மையான அதிகாரி என்று சொல்றாங்க. என்ன ஈகோ. நானா நீயான்னு போட்டு பார்க்கலாம் அப்படிங்கிற மாதிரி பார்க்கிறீங்களா. காக்கிச் சட்டையை கழட்டி வைச்சுட்டு வாங்க பார்ப்போம். நீயா நானான்னு பார்த்துக்கிறேன். அந்த அதிகாரம் தானே உங்களை இப்படி பண்ண வைக்கிறது. அந்த திமிர் தானே உங்களை இப்படி செய்ய வைக்கிறது.
வேற மாதிரிதான் செலவு செய்யனும்
ஒருத்தர் செய்த தப்பு எவ்வளவு செலவு தெரியுமா இதுக்கு. உன்னோட மாச சம்பளம் எவ்வளவு. இந்த கூட்டத்துக்கே எனக்கு 10 லட்சம் செலவு. இப்படி ஒவ்வொரு வாட்டியும் 10 லட்சம்னு நான் செலவு செய்ய முடியுமா? அப்ப நான் இந்த 10 லட்சத்த வேற மாதிரி தான் செலவு செய்ய வேண்டும்.
நாங்கள் தயார்
என் தொண்டர்களிடம் அடிச்சுட்டு ஒரு பிரச்சினை ஆச்சுன்னா ஓடி ஒளியாதே என்று சொல்லியிருக்கிறேன். அடிக்கிற தைரியம் இருந்தால் வழக்கையும் ஏற்றுக்கொள்ளணும் என்றுதான் சொல்லி வைத்துள்ளேன். இறுதியாக சொல்கிறேன் இது தொடரணும்னு அரவிந்தன் நினைத்தால் அதை சந்திக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பேசியிருந்தார் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.