கடைசி வரை தப்புன்னு உணரவே இல்லையே கருணாஸ்!
கடைசிவரை தன் தவறை கருணாஸ் உணரவேயில்லை.
Recommended Video
சென்னை: கடைசி நேரம் போலீஸார் கைது செய்யப்பட்ட நேரத்திலும் கருணாஸின் கெத்து குறையவே இல்லை.
வள்ளுவர் கோட்டத்தில் கருணாஸ் எக்குத்தப்பாக பேசி 4 நாள் ஆகிவிட்டது. கருணாஸ் பேசியதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து விட்டார்கள். எல்லா பக்கங்களிலும் இருந்து கருணாஸை கைது செய்தே ஆக வேண்டும் என்று முழக்கங்கள் எழ தொடங்கியது. ஒரு முதலமைச்சரை கருணாஸ் அவமரியாதையாகி பேசிவிட்டதற்காக தமிழக அரசு மவுனம் காக்கிறது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அரசு தரப்பில் பதிலடி
இதற்காக கருணாஸை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதற்கு நடுவில் கருணாஸ் தலைமறைவு என்று செய்தி பரவியது. கூடவே முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் கருணாஸ் பேசியது குறித்து எதுவுமே கருத்து சொல்லவில்லை என்றும் பரவலாக பேச்சு எழுந்தது. இதற்கு ஜெயக்குமாரும், முதலமைச்சரும் சட்டம் தன் கடமையை செய்யும் பதிலடியும் கொடுத்துவிட்டார்கள்.
நிரபராதி போல் விளக்கம்
ஆனால் இவ்வளவையும் 4 நாட்களாக உன்னிப்பாகவே கருணாஸ் கவனித்து வந்துள்ளார். ஆனாலும் தான் பேசியதற்காக உச்சபட்சமாக வருத்தம்தான் தெரிவித்தாரே தவிர, மன ரீதியாக, உளப்பூர்வமாக அவர் வருந்தியதாகவோ, பேசியது தவறு என்றோ கூட தெரியவில்லை. தான் பேசியது தவறே இல்லை என்றும், யூ-டியூப்பில் தான் பேசிய 45 நிமிட பேச்சினை பார்த்தால் அது புரியும் என்றும் விளக்கமும் கொடுத்தாரே தவிர தன்னை ஒரு நிரபராதி போலவே காட்டிக் கொண்டார்.
சரியா? தவறா?
இன்று காலை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றும்போதுகூட கருணாஸின் பேச்சில் வருத்தம், கவலை, எதுவுமே தெரியவில்லை. மாறாக, பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுவதாக குற்றம்தான் சாட்டினார். இனி போலீஸ், கோர்ட்டு என்று இந்த சர்ச்சை சம்பவம் தொடரும். என்றாலும் தான் பேசியது எல்லாம் சரிதான் என்று கருணாஸ் சொன்னாலும், பொது இடத்தில் அதனை பேசியது தவறு என்றோ, ஒரு முதல்வரை மிரட்டும் தொனியில் பேசியது தவறு என்றோ என்றைக்கு உளமார உணர்வார் என தெரியவில்லை.
கண்துடைப்பா?
ஆனால் கருணாஸின் கைது நடவடிக்கை கண்துடைப்புக்கான ஒன்றாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்றே அரசியல் நாகரீகம் உள்ளோர் கருதுகின்றனர்.