கிடைத்தது கருணாஸுக்கு முன்ஜாமீன்.. வழங்கியது மதுரை ஹைகோர்ட் பெஞ்ச்
கருணாசுக்கு முன்ஜாமீன் அளித்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
மதுரை: எம்.எல்.ஏ கருணாஸுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கி உள்ளது. 2017-ல் நடந்த மோதலின்போது முத்தையா என்பவர் காரை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த முன்ஜாமீன் கருணாசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு கருணாஸ் எம்எல்ஏ முதல்வரையும், காவல்துறை அதிகாரியையும் அவதூறாக பேசியதாக நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நிபந்தனை ஜாமீன்
பின்னர், சேப்பாக்கத்தில் போராடியதற்காக திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். இந்த இரண்டு வழக்குகளிலும் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாசும் வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தார்.
வீடு பூட்டி இருந்தது
இதனை தொடர்ந்து, புளியங்குடியில் போன வருஷம் செப்டம்பர் 1-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 302-வது பிறந்த நாள் விழாவில் தேவர் பேரவை தலைவரின் கார் கண்ணாடியை உடைத்ததற்காக திரும்பவும் கைது என்ற தகவல் வந்தது. போலீசார் கைது செய்ய வீட்டுக்கு போனால் கருணாஸ் அங்கு இல்லை. வீடு பூட்டி இருந்தது.
சாதாரண வார்டு
விடிகாலையிலேயே கருணாசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வடபழனியில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கருணாஸ் தற்போது தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டார். மருத்துவமனையிலேயே கருணாஸ் அனுமதிக்கப்பட்டாலும், புளியங்குடி வழக்கில் கைது ஆகாமல் இருக்க மதுரை கோர்ட்டில் முன் ஜாமீன் கோரினார்.
ஜாமீன் வழங்கியது
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றமும், நேற்று அதாவது 9-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது. ஆனால் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில், கருணாசின் முன்ஜாமீன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின்போது, கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் நடைபெற்று ஒரு வருடம் கழித்து இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார் நீதிபதி. அதன் பின்னர் கருணாசுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.