ஆயிரம் வழக்கு போட்டாலும் எதிர்கொள்வேன்.. கருணாஸ் அதிரடி
வேலூர்: சிறையிலிருந்து விடுதலையான கருணாஸ் இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்று தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 23-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீது நேற்று காலை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
[ இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... 6 அடிக்கு உயர்ந்த கடல் அலை.. 30 பேர் பலி ]
மற்றொரு வழக்கு
இதற்கிடையில், சென்னையில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீஸார் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர். கிரிக்கெட் ரசிகர்களை தாக்கியதாக கொலை முயற்சி வழக்கும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றக் காவல்
இந்த வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக திருவல்லிக்கேணி போலீஸார் புதன்கிழமை திடீரென அறிவித்தனர். இதுதொடர்பாக எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீஸார் மனு அளித்தனர். ஆனால் கருணாஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, இந்த குற்றச்சாட்டில் கருணாஸை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப அவரது வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
நிபந்தனை ஜாமீன்
இதனை ஏற்றுக் கொண்டு கருணாஸ் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்துசெய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கை மட்டும் ஏற்றுக்கொண்டது நீதிமன்றம். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று மாலை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், கருணாஸூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
கையெழுத்திட உத்தரவு
இதையடுத்து கருணாஸ் இன்று வேலூர் சிறையிலிருந்து விடுதலை ஆனார். அவர் தினந்தோறும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உண்மை நின்றது
இதையடுத்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை சட்டப்படி எதிர்கொள்வேன். என் மீதான வழக்குகளில் உண்மை நின்றது ; நீதி வென்றது. ஸ்டெர்லைட் குறித்து நான் கருத்து தெரிவித்ததால் என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றார் கருணாஸ்.