கூவத்தூரில் நடந்தவற்றை கூற தயார்.. முதல்வருக்கு கருணாஸ் மறைமுக மிரட்டல்!
Recommended Video
சென்னை: கூவத்தூரில் என்ன நடந்தது என்பது குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டால் கூற தயார் என்று கருணாஸ் மீண்டும் மறைமுகமாக முதல்வருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 23-ம் தேதி நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கருணாஸுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும் அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தினமும் 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனிடையே சென்னையில் நடந்த ஐபிஎல் போராட்டத்தின் போது ரசிகர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கிலும் கருணாஸ் ஜாமீன் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கிற்காக கருணாஸ் தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை வேலூர் சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை ஆனார். இதைத் தொடர்ந்து சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு தனது அமைப்பினருடன் சென்று கருணாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில் கூவத்தூரில் நடந்தவற்றை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டால் கூற தயார். போலீஸார் என் மீது வழக்குப் பதிய மேற்கொண்ட வேகத்தை மக்கள் பணியில் காட்ட வேண்டும்.
காவல்துறையினர் தங்களது பணியை வேகமாக செய்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஊடகங்களில் பேசுவதால் என் மீது பொய் வழக்கு போடுகின்றனர். கடந்தாண்டு நடந்த சம்பவங்களில் கூட காவல் துறை என் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்தனர் என்றார் கருணாஸ்.
கடந்த 16-ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது கூவத்தூரில் நான் இல்லாமல் இந்த அதிமுக அரசாங்கம் எப்படி அமைந்தது என்று கேட்டார் கருணாஸ். இதுகுறித்து அப்போதே கருணாஸிடம் செய்தியாளர்கள் கேட்டபோது கூவத்தூரில் நடந்தவற்றை உயர்நீதிமன்றத்தில்தான் சொல்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.