கருணாஸின் டூ வீலர் ஆர்சி புக்கை ஒப்படைக்க எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை!
எம்எல்ஏ கருணாஸின் டூ வீலர் ஆர்சி புக்கை ஒப்படைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை: எம்எல்ஏ கருணாஸின் டூ வீலர் ஆர்சி புக்கை ஒப்படைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது போலீஸ். அதே நேரத்தில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் கருணாஸ்.
2 புதிய வழக்குகள்
இந்நிலையில் கருணாஸை காவலில் விசாரிக்க அனுமதி மறுத்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது. இதனிடையே ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக தொடர்பாக 2 வழக்குகளில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கைது செய்யப்பட்டார் கருணாஸ்.
[40 கைது.. 7 நாள் கலவரம்.. உ.பி மாநில பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய சிறுவர்களின் கிரிக்கெட் சண்டை! ]
7 நாள் ஜெயில்
இந்த வழக்கிலும் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது போலீஸ். அதில் கொலை முயற்சி வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் 7 நாள் நீதிமன்ற காவல் விதித்தது.
நிபந்தனை ஜாமீன்
இதைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸுக்கு முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
2 பேர் உத்தரவாதம்
ஜாமீன் பெற்றுள்ள கருணாஸ் 50000 ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என்றும், இரண்டு பேர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
டூ வீலர் ஆர்சி புக் நகல்
மேலும் கருணாஸ் தனது இருசக்கர வாகனத்தின் ஆர்சி புக் நகலை கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரி முன் 30 நாள் தினமும் கையெழுத்து இட வேண்டும் என்றும் எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.