கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேற.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார்.. கருணாஸ் அதிரடி
கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற எம்எல்ஏ பதவியை இழக்கவும் தயாராக இருப்பதாக கருணாஸ் கூறினார்.
கும்பகோணம்: கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேற எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று அக்கிராமத்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கதிராமங்கலத்திற்கு எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் சென்றனர். அங்கு ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடி வரும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் போன்ற பிரச்சனைகள் எழுந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்று கூறினார். மேலும், கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்றும் அதற்காக நாங்கள் மூவரும் எங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறோம் என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.