கருணாஸை போலீஸ் காவலில் விட எழும்பூர் கோர்ட் மறுப்பு
காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல் செய்ததை தொடர்ந்து நடிகர் கருணாஸ் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் கருணாஸை போலீஸ் காவலில் விட சென்னை எழும்பூர் கோர்ட் அனுமதி மறுத்து விட்டது. அடுத்து அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையும் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ந் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் அடித்துவிடுவேன் என பயப்படுவதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
சென்னை தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன் தனது காக்கிச்சட்டையை கழற்றி விட்டு நேருக்கு நேர் மோதி பார்க்குமாறு சவால் விடுத்தும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும் பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருணாசின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கருணாசை ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று, நுங்கம்பாக்கம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து கருணாஸ் எழும்பூர் 14-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். இதற்காக வேலூர் சிறையில் இருந்து அவர் அழைத்து வரபபட்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி போலீஸ் காவலில் விடுவிக்க மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து கருணாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.