தி.மு.க நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் தேர்தலில் 'கானா' மகன் சங்கர் அதிர்ச்சி தோல்வி!!
சென்னை: தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் மகன் சங்கர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தமிழகம் முழுவதும் தி.மு.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் சென்னை அறிவாலயம் மற்றும் ராயபுரம் அன்பகத்தில் நடைபெற்று வருகிறது.
30 மாவட்டங்களுக்கு சென்னையில் தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான மாவட்ட செயலாளர் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. சில மாவட்டங்களுக்கான தேர்தலில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் திமுக தலைமையே தலையிட்டு சுமூக நிலைமையை ஏற்படுத்தியது.
இதனிடையே திருநெல்வேலி மத்திய மாவட்டத்துக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலியைப் பொறுத்தவரை கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வெற்றிபெற்றார். மேற்கு மாவட்டத்துக்கு துரைராஜ் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் மத்திய மாவட்ட தேர்தல் இன்று நடைபெற்ற்து. இதில் முன்னாள் மாநகர செயலாளர் அப்துல்வகாப், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியனின் மகன் சங்கர் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 34 வாக்குகள் பதிவாகின.. கருப்பசாமி பாண்டியன் மகன் சங்கருக்கு 11 வாக்குகள்தான் கிடைத்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல் வகாப் 23 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக 65 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டதை மிகக் கடுமையாக எதிர்த்தவர் கருப்பசாமி பாண்டியன். லோக்சபா தேர்தலில் தமது மகனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றுஎதிர்பார்த்தார். அது நிறைவேறவில்லை.
இதையடுத்து மகனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்றும் எதிர்பார்த்திருந்தார் கருப்பசாமி பாண்டியன். தற்போது அவர் மகன் தோல்வி அடைந்துள்ளதால் கருப்பசாமி பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.