ஆதரவாளர்கள் புடை சூழ கோர்ட்டிற்கு வந்து சரணடைந்து முன்ஜாமீன் பெற்றார் கரூர் அன்புநாதன்!
கரூர்: சட்டசபைத் தேர்தல் சமயத்தில் ரூ. 5 கோடி அளவுக்கு பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கரூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதன் இன்று கரூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
சட்டசபைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் பண வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கரூரைச் சேர்ந்த அன்புநாதன் வீடு மற்றும் குடோன்களில் சோதனை மேற்கொண்டதில் 4 கோடியே 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அன்புநாதன் தலைமறைவானார். அவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகினார் அன்புநாதன். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று கரூர் முதலாவது குற்றவியல் கோர்ட்டில் நேரில் ஆஜரானார் அன்புநாதன். நீதிபதி ரேவதி முன்பு ஆஜரான அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி தினசரி வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அன்புநாதன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக கோர்ட்டுக்கு வந்த அன்புநாதனை புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை அன்புநாதனுடன் வந்த அவரது ஆதரவாளர்கள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.