கந்து வட்டிக் கொடுமை... கரூர் அருகே அண்ணன்- தம்பி தற்கொலை
கரூர்: கரூர் அருகே கந்து வட்டிக் கொடுமை காரணமாக அண்ணன்- தம்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை, பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மனோகரன் (45). வரிக்காபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வரும் மனோகரன் குடும்பமும், அவரது தம்பி அண்ணாதுரை (40) குடும்பமும் பாரதிதாசன் நகரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு மனோகரன், பழனிச்சாமி என்ற நண்பர் மூலம் திருமாநிலையூரைச் சேர்ந்த குபேந்திரன் (44) என்பவரிடம் ரூ. 3 லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார். மாதந்தோறும் சரியாக வட்டி கட்டி வந்த மனோகரன் கடந்த சில மாதங்களாக வட்டி கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வட்டி மற்றும் அசல் சேர்த்து ரூ. 18 லட்சம் திருப்பித் தர வேண்டும் என மனோகரனிடம் குபேந்திரன் கேட்டுள்ளார். ஆனால், அப்பணத்தை மனோகரனால் கொடுக்க முடியவில்லை.
இதையடுத்து பழனிச்சாமியும், குபேந்திரனும் சேர்ந்து மனோகரன் வீட்டை எழுதி வாங்கிக் கொண்டனர். இந்த நிலையில் நேற்று மனோகரன் வீட்டிற்கு சென்ற பழனிச்சாமியும், குபேந்திரனும் வீட்டை காலி செய்ய வற்புறுத்தி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த மனோகரனும், அண்ணாதுரையும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடித்தனர். இதனால், குபேந்திரனும், பழனிச்சாமியும் அவர்களுடன் இருக்கும் போதே திடீரென தோட்டத்திற்கு வைத்திருந்த விஷ மாத்திரைகளை எடுத்து இருவரும் விழுங்கி, மயங்கி விழுந்தனர். கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக மனோகரனின் மனைவி கலைச்செல்வி பசுபதிபாளையம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அருண்மொழி அரசு, குபேந்திரன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் மீது கந்து வட்டி வழக்கு பதிவு செய்தார். குபேந்திரன் தலைமை மறைவாகி விட்ட நிலையில், பழனிசாமியை மட்டும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள குபேந்திரனையும் போலீசார் தேடி வருகின்றனர்.