85 வயது மூதாட்டி வீட்டில் தரையில் அமர்ந்து சாப்பிட்ட கரூர் கலெக்டருக்கு குவியும் பாராட்டுகள்
கரூர்: கரூர் மாவட்டத்தில் ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிதொகை அளித்ததுடன் அவருடன் சேர்ந்து உணவருந்திய ஆட்சியருக்கு பொதுமக்களிடமிருந்தும், சமூக வலைதளங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
கரூர் தாலுகா சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆதரவற்ற ராக்கம்மாள் 80 என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும், வறுமை காரணமாக அரசு தமக்கு உதவித்தொகை கிடைக்க உதவு செய்யுமாறும் மனு அளித்திருந்தார்.
மூதாட்டியின் வறுமையை அறிந்த மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மூக்கணாங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமிற்கு சென்றிருந்தபோது, மூதாட்டி ராக்கம்மாளின் வீடு தேடி சென்றார்,. அப்போது அரசின் முதியோர் உதவிதொகை பெறுவதற்கான ஆணையை வழங்கி ஆறுதல் கூறியதுடன், மூதாட்டிக்கு உதவிடுமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் தனது வீட்டில் சமைத்த உணவை எடுத்துச் சென்று அந்த மூதாட்டிக்கு உணவளித்து தானும் உணவருந்தினார்.
இரண்டு வாழை இலைகளை போட்டு மூதாட்டியின் வீட்டிலேயே அமர்ந்து மதிய உணவை அவர் பகிர்ந்து உண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மிகவும் வறுமையில் வாடிய நிலையில், உதவித் தொகை கிடைக்கப்பெற்றதில் மூதாட்டி ராக்கம்மாள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து கூறிய மாவட்ட ஆட்சியர், தன் வீட்டிற்கு வந்திருப்பது, கலெக்டர் என்பதைக் கூட அறியாத அவரது நிலை கண்டு, மனதில் வலி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
கலெக்டர்கள் என்றாலே ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போல நடந்துகொள்ளாமல், மக்களுக்காக சேவை செய்பவர்கள் என்று அறிந்து, இப்படி எளிமையாகவும், அன்பாகவும் நடந்துகொள்ளும் விதம் வரவேற்கத்தக்கது. மாவட்ட ஆட்சியர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நேரத்தில் கரூர் மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் ஆதிக்க ஆட்சியர்களிடையே நல்ல மாற்றத்தை தரும் என நம்பலாம்.