பஸ்ஸெல்லாம் ஃபிட்டா இருக்கா. பள்ளி வாகன ஆய்வை நேரில் பார்த்த கரூர் கலெக்டர் ஜெயந்தி
கரூர்: தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து அரசு விதிமுறைகளின் படி பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி பள்ளி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிப் பேருந்துகளையும் வட்டார போக்குவரத்துத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் நடந்த ஆய்வை கலெக்டர் ஜெயந்தி நேரில் பார்த்தார்.
ரூல்ஸ் பின்பற்றப்படுகிறதா
கரூர் மாவட்டம், கரூர் அட்லஸ் கலையரங்க மைதானத்தில் வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தனியார் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதா என பார்வையிட்டார்.
தர உறுதிச் சான்று
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி மோட்டார் வாகனச்சட்டம் சிறப்பு விதி 2012 ஆணைப்படி தனியார் பள்ளி வாகனங்களின் செயல்பாடு குறித்து சிறப்பு தணிக்கை செய்ய உத்தரவிட்டதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொண்டு தரத்தின் தன்மை குறித்து உறுதி செய்யப்பட்டு சான்று வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இந்த ஆண்டும் பள்ளி விடுமுறை நாட்களில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டு தற்பொழுது 11.05.2015 முதல் 31.05.2015 வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளையும் ஆய்வு மேற்கொள்ளும் பணி துவக்கப்பட்டுள்ளன.
636 வாகனங்கள்
கரூர் மாவட்டத்தில் 97 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 516 வாகனங்களும், குளித்தலை வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 69 வாகனங்களும், அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் 51 வாகனங்களும் என மொத்தம் 636 வாகனங்கள் இயங்கி வருகின்றன. இன்றைக்கு 138 வாகனங்களுக்கு தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படிக்கட்டுகள் சரியாக இருக்கிறதா
இந்த ஆய்வில் பள்ளி வாகனத்தில் படிக்கட்டுகள் சரியான அளவில் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் மற்றும் தீயணைப்புக்கருவி, முதலுதவிப்பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, ஜன்னல்களில் கம்பிவலை பொருத்துதல், பேருந்தின் அவசரகால வழி கதவு இருபுறமும் சரியான நிலையில் லாக் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் ஓட்டுநர் உரிமம், பள்ளி வாகனத்தில் போதிய இடைவெளியில் இருக்கைகள் பொருத்துதல், மாணவ, மாணவிகளின் பொருட்கள் வைப்பதற்கான ரேக் மற்றும் அரசு உத்தரவுப்படி மஞ்சள் கலரில் பெயிண்ட் ப+சப்பட்டு அதில் தெளிவான முறையில் பள்ளியின் பெயர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
போதிய இடைவெளி உள்ளதா
ஓட்டுநர் இருக்கைக்கு அருகே போதிய இடைவெளி என அரசு விதிமுறைகளுக்குட்பட்ட 21 விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றப்பட்டுள்ளதா என பார்வையிட்டார்கள். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளும் போது சரியான முறையில் ஆய்வு மேற்கொள்வதுடன் குறைபாடுகள் இருந்தால் திருப்பி அனுப்பி சரி செய்த பின்பு அதை உறுதி செய்த பின்னர் அந்த வாகனத்திற்கான அனுமதியை வழங்க வேண்டும் என தெரிவித்ததுடன் மேலும் திட்டமிட்ட நாட்களுக்குள் அனைத்து பள்ளி பேருந்துகளையும் ஆய்வு செய்து தரத்தன்மை குறித்து உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி உத்தரவிட்டார்.