85 வயது மூதாட்டியை நேரில் சென்று சந்தித்து உதவித்தொகை வழங்கி, உணவு பரிமாறிய கரூர் கலெக்டர்
85 வயது மூதாட்டியை நேரில் சென்று சந்தித்து உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்த கரூர் ஆட்சியருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
கரூர்: கரூர் மாவட்டத்தில் சின்னம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்ததோடு மட்டுமில்லாமல் அவருக்கு தனது வீட்டில் இருந்தே உணவு எடுத்துச்சென்று ஆட்சியரே நேரில் பரிமாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சின்னம்மநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராமர். இவரது மனைவி ராக்காயி இவருக்கு வயது 85. ஆதரவற்ற நிலையில் இருவரும் உடல்நலிவுற்று இருப்பதால், முதியவர்கள் இருவரும் யாருடைய அரவணைப்பும் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், முதியவர்களின் நிலையைக் கண்டு வருத்தமடைந்த சின்னம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், இந்த முதியவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று மனுக்கொடுத்தனர்.
இந்த மனு ஆட்சியர் அன்பழகன் பார்வைக்குச் சென்றதை அடுத்து, மனுவின் மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று மூக்கணாங்குறிச்சியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் பங்கேற்ற ஆட்சியர் அன்பழகன், திரும்பி வரும் வழியில் முதியவர்கள் ராமரையும், ராக்காயியையும் சந்திக்க திடீரென்று சின்னம்மநாயக்கன்பட்டிக்குச் சென்றார்.
அங்கு முதியவர் ராக்காயியைச் சந்தித்த அன்பழகன், அவருக்காகத் தனது வீட்டில் இருந்து செய்து கொண்டுவந்திருந்த உணவை அவருக்குப் பரிமாறு அவருடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர், ராக்காயிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான ஆணையை அவரிடம் ஆட்சியர் அன்பழகன் கொடுத்தார்.
ஆட்சியர் கையால் முதியோர் உதவித்தொகை ஆணை பெற்ற மூதாட்டி ராக்காயி, மிகவும் நெகிழ்ந்து போய் ஆட்சியரை வாழ்த்தினார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் அன்பழகன் கூறுகையில், முதுமை நிலையில் உடலுழைப்பு செய்து பிழைப்பு நடத்த இயலாத ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்குகிறது. தகுதி வாய்ந்த நபர்களுக்கு உடனே வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என்று குறிப்பிட்டார்.