முருங்கை பவுடர் தொழிற்சாலை கேட்கும் விவசாயிகள்.... பாக்கியராஜ் முதல்வரானால்தான் சாத்தியமாகும் போல...
கரூர்: கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சி பகுதியில் அதிக அளவில் விளையும் முருங்கைகாய் அண்டை மாநிலங்களில் கூட பிரசித்தி பெற்றது. இந்த பகுதியில், முருங்கைகாய் பவுடர் தொழிற்சாலை அமைத்து முருங்கை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு விளையும் முருங்கைகாய்கள் மிகவும் சுவையானவை மட்டுமல்ல பிரபலமானவையும் கூட.
எனவே இதைப் பயன்படுத்தி முருங்கைக்காய் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தால் இப்பகுதி முருங்கை விவசாயிகளுக்கு நலமாக இருக்கும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.
அரவாக்குறிச்சி
கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சி தொகுதி கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
முருங்கை விவசாயம்
பரந்துவிரிந்து காணப்படும் இந்த தொகுதியில் முருங்கை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
மரம் முருங்கை - செடி முருங்கை
முருங்கையில் மரம்முருங்கை, செடிமுருங்கை என்றும் இது இரண்டும் சேர்ந்த ஒட்டுரகம் கரும்புமுருங்கை எனப்படுகிறது.
நீண்ட ஆயுள் கொண்ட மரம் முருங்கை
இதில் மரம்முருங்கை மட்டுமே நீண்ட காலம் பலன் தரக்கூடியது. செடி மற்றும் கரும்பு முருங்கை ஒராண்டு பயிர் மட்டுமே.
ஆடி - ஆவணி - புரட்டாசியில்
ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெய்யும் மழையை மட்டும் நம்பி இந்த விவசாயம் நடக்கிறது. இந்த மூன்று மாதங்களில் பெய்யும் மழையால் அடுத்து வரும், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருங்கை விளைச்சல் அதிக அளவில் இருக்கும்.
சி்த்திரை - வைகாசி
இதுதவிர சித்திரை, வைகாசி மாதங்களில் இரண்டாவது சீசனாக ஓரளவு முருங்கை காய்ப்பு இருக்கும். மற்ற மாதங்களில் விளைச்சல் இருக்காது.
முருங்கைப் பவுடர்
சீசன் காலங்களில் அதிக அளவில் விளையும் இந்த முருங்கையை பவுடர் ஆக்கி ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். இதனால் சீசன் காலங்களில் விற்பளையாகமல் தேங்கி வீணாகும் முருங்கையை பவுடர் செய்து பயன்படுத்த இந்த பகுதில் அரசே ஒரு பவுடர் தொழிற்சாலை தொடங்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால் செவிடன்காதில் ஊதிய சங்காக இருக்கிறது இவர்கள் கோரிக்கை.
பாக்கியராஜ் வரணுமோ...
ஓவ்வொரு தேர்தலிலும், ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகளின் முக்கிய வாக்குறுதியே "இந்த பகுதியில் முருங்கைகாய் பவுடர் தொழிற்சாலை அமைக்க பாடுபடுவேன்" என்பதுதான். ஆனால் இதுவரை எந்த அரசும் முருங்கைகாய் பவுடர் தொழிற்சாலை அமைக்க முன்வரவில்லை. எனவே, இந்த பகுதியில் அரசே முருங்கைகாய் பவுடர் தொழிற்சாலை அமைத்து முருங்கை விவசாயிகளில் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பாக்கியராஜ் முதல்வரானால்தான் சாத்தியமாகும் போல...!!