"அம்மா"வின் பிறந்த நாளை சீரும், சிறப்புமாக கொண்டாடிய செய்தி மக்கள் தொடர்பு துறை!
கரூர்: என்னதான் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் தண்டனை தந்தாலும், குற்றவாளி என்ற முத்திரையுடன் அவர் வலம் வந்தாலும், பதவியிழந்தவர் என்றாலும் கூட தமிழக அரசுக்கு அவர்தான் இன்னும் முதல்வராக இருக்கிறார் போலும். தமிழகத்தின் பல்வேறு அரசுத் துறைகளும் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 67 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க வினர் கொண்டாடினர். அதேபோல செய்தி மக்கள் தொடர்பு துறையையும் கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என தலைமை செயலகத்திலிருந்து மறைமுக உத்தரவு போயிருந்ததாம்.
இதையொட்டி தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செய்தி மக்கள் தொடர்பு துறையினர் புகைப்பட கண்காட்சியை வைத்து அதிமுக பொதுச் செயலாளரின் பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
கரூர் பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது. இதனை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியும், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அருணா உள்ளிட்ட பல அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இந்த புகைப்பட கண்காட்சியில் ஜெயலலிதா அண்ணாவுடன், கல்விக் கண் திறந்த காமராஜர், தந்தை பெரியார் ஆகியோருடன் இருந்தது மட்டுமில்லாமல் "அம்மா" பொதுமக்களுக்கு கொடுத்த நலத் திட்டங்கள் என "அம்மா" புராணமாகவே இருந்தது. லட்டு ஜாங்கிரி, பூந்தி மட்டும்தான் தரவில்லை. மற்றபடி பிறந்த நாளை செய்தி மக்கள் தொடர்புத்துறை சிறப்பாகவே கொண்டாடியது.