செலவுக்கு வச்சுக்க கண்ணு.. ஜோதிமணிக்கு ஆரத்தி எடுத்து கைக்காசும் தரும் கிராமத்தினர்
சென்னை: கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர், ஜோதிமணி பிரசாரத்திற்கு சென்ற போது வரவேற்பு கொடுத்த கிராம மக்கள், ஆரத்தி எடுத்த கையோடு செலவுக்கும் காசு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு வந்தாலே அனேக பெண்மணிகளுக்கு கொண்டாட்டம்தான் ஆரத்தி எடுத்தால் அசால்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் தட்டில் விழும்.
தேர்தல்கமிஷன் என்னதால் தடை போட்டாலும் ஆங்காங்கே ஆரத்தி தட்டில் பணம் போடும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வேட்பாளர் ஒருவருக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்ததோடு மட்டுமல்லாது, கை நிறைய பணமும் கொடுத்து நெகிழ்ச்சியடைய வைத்துள்ள சம்பவம் நம் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுள்ளது.
நம்பிக்கை வேட்பாளர்
கரூர் லோக்சபா தொகுதியில் இரு பண முதலைகளின் நடுவே களமிறங்கியிருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அறிமுக கூட்டத்திலேயே தன்னிடம் ரூ.2500 மட்டுமே இருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிடுவர்.
நீங்களே செலவு பண்ணுங்க
தன்னிடம் செலவுக்கு பணமில்லை... ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது என்று கூறி வரும் ஜோதிமணி, செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்த கையோடு பிரசாரத்திற்கு கிளம்பிவிட்டார்.
தொகுதி மக்களுக்குத் தெரியும்
பஞ்சாயத்துத் தலைவராக இருந்த வரை, கிராமத்திலேயே இருந்த ஜோதிமணியைப் பற்றி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியுமாம். அதனால் அவர் பிரசாரத்திற்கு போகும் கிராமங்களில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கின்றனர் மக்கள்.
செலவுக்கு வச்சுக்க கண்ணு
அதோடு மட்டுமல்லாது வீட்டிற்கு இவ்வளவு என்று வசூலித்து கை நிறைய காசும் கொடுத்து அனுப்பினர் கிராம மக்கள். அதை வாங்கும் போதே ஜோதிமணியின் கண்களில் லேசாக கண்ணீர் எட்டிப்பார்க்கத்தான் செய்தது.
நல்லவங்களை கைவிட மாட்டாங்க…
கரூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே ஜோதிமணியுடன் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் கரூருக்கே வந்து தங்கி அவருக்காக வேலை செய்கின்றனராம். நம்பிக்கை இருக்கு சார்... நல்லவங்களை மக்கள் எப்பவுமே கைவிட மாட்டாங்க!' என்கிறார் ஜோதிமணி.