திருட்டுப் போன கவரிங் நகையெல்லாம் தங்கம்னு பொய் சொல்லாதீங்க - டிஎஸ்பி எச்சரிக்கை: வீடியோ
திருட்டுப் போன நகைகளின் விவரங்களை உண்மையாக கூற வேண்டும். பொய் விவரங்களை அளித்தால் அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கபப்டும் என கரூர் டிஎஸ்பி கும்பராஜா எச்சரித்தார்.
கரூர்: நகை கொள்ளை போன வழக்கில் பொய்யான தகவல்களைக் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் டிஎஸ்பி கும்பராஜா எச்சரித்துள்ளார்.
கரூரில் கடந்த சில நாட்களாக அதிகமாக கொள்ளைகள் நடந்துள்ளன. அதுகுறித்து புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து குற்றவாளிகளை போலீசார் பிடிக்கின்றனர். ஆனால், அவர்களிடம் விசாரணை செய்யும் போது புகாருக்கும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை என போலீசார் கூறுகின்றனர்.
இதுகுறித்து கரூர் டிஎஸ்பி கும்பராஜா கூறும்போது நகைகள் திருடு போனதாக புகார் கூறுகிறவர்கள் உண்மையான தகவல்களைக் கூற வேண்டும். பத்து சவரன் நகை திருட்டுப் போய்விட்டது என புகார் கொடுக்கிறார்கள். ஆனால், குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கும் போது வெறும் இரண்டு சவரன் மட்டுமே தங்கம் என்று தெரிய வருகிறது. மீதி நகையெல்லாம் கவரிங் நகைகளாக இருக்கிறது.
இப்படி பொய்யான புகார்களைக் கொடுக்கும் போது போலீசரால் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. எனவே பொய்யான புகார் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.