காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கரூர் மாணவர்கள் கடிதம்
காவிரி விவகாரம் தொடர்பாக கரூர் மாணவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கரூர்: காவிரி மேலாண்மைவாரியம் அமைக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு குளித்தலை பள்ளி மாணவ-மாணவிகள் கடிதம் எழுதியதற்காக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழக மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தரும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு அமைப்பினர் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 170 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு தங்கள் கைப்பட கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், ''தமிழகத்தில் விவசாயம் குறைந்துவிட்டது. காரணம் காவிரி நீர் போதிய அளவு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. காவிரி பிரச்சினை குறித்த தங்களின் மேலான உத்தரவை உறுதியாக அமல்படுத்தும்படி, கர்நாடக மாநிலத்திற்கு அறிவுரை வழங்க தங்களை தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.
மாணவர்களின் இந்த செயலினை பல்வேறு தரப்பினரும், சமூக ஆர்வலர்களும் மனதார வரவேற்றுள்ளனர். மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.