நிலங்களை ஆக்கிரமிக்கும் கருவேல மரங்கள் .... விவசாயிகள் வேதனை
விவசாய நிலங்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெல்லை: பிசான பருவத்திற்கு பாபநாசம் அணை திறக்கப்பட்ட போதிலும் கருவேல மரம் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் நடவு செய்ய முடியுமா? என்று தயக்கத்தில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒராண்டுக்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்ததால் பாபநாசம் அணை வறண்டு காணப்பட்டது.
இதனால் பிசான நெல் சாகுபடி கைவிடப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுபாடும் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தாண்டு ஜூலை மாதத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றம் அளித்தது.
ஆனால் அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் ஓரளவு மழை பெய்ததாலும், அது செப்டம்பர் மாதம் வரை நீடித்ததால் அணைகளுக்கு ஓரளவுக்கு நீர் வரத்து இருந்தது. பருவமழை தவறி தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை.
இதனால் பிசான நெல் சாகுபடிக்கு கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அக் 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடுவது வழக்கம். தீபாவளி பண்டிக்கை அன்று பலத்த மழை கொட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக அன்று வெயிலே அடித்தது. தற்போது நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஹெக்டர் பாசன நிலத்தில் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மழை இல்லாததால் பிசான நெல் சாகுபடியை துவங்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும் அணைகளிலிருந்து தண்ணீர் வரும் தடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் முழுமையாக தண்ணீர் வந்து சேருமா என்றும் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.