கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா.. 2100 தமிழக மீனவர்கள் பங்கேற்பு
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழக மீனவர்கள் 2100 பேர் கிளம்பிச் சென்றுள்ளனர்.
ராமேஸ்வரம் : கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதில் பங்குபெற தமிழக மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கச்சத்தீவு சென்றுள்ளனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் இந்திய மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்குபெற உள்ளனர்.
கொடியேற்றத்துடன் தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் திருவிழாவில், இன்று இரவு சிலுவைப்பாடு நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து நாளை காலை திருவிழாவின் சிறப்பு திருப்பலி தமிழ் மொழியிலும், முதல்முறையாக சிங்கள மொழியிலும் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 62 விசைப்படகுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2,100 பக்தர்கள் புறப்ப்ட்டுச் சென்றுள்ளனர். இதற்காக, சிறப்பு அனுமதிச் சீட்டு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பக்தர்கள் சார்பில், புனித அந்தோணியார் ஆலயத்திற்கு 40 அடி உயரமுள்ள கொடி மரமும், 4 அடி கொண்ட அந்தோணியார் சிலையும் வழங்கப்படுவதற்காகப் படகுகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன.
முன்னதாக நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு செல்ல அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மீனவர்கள் மனுக்கொடுத்தனர். ஆனால் அதை மாவட்ட நிர்வாகம் நிராகரித்துவிட்டது.