For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அச்சோச்சோ!

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

பக்கம்தானே வீடு, காலையிலேயே வந்துட்டு போய்ட்டீங்களோ என்று நண்பர் கேட்டார். சோ வீட்டு கியூவில் நின்று.

நா ஈசியா எமோஷனல் ஆகிற ஆசாமி. ரொம்ப பிடிச்சவங்க வீட்டு துக்கத்துக்கு போறதில்ல. போயிட்டவங்க பாடிய பாத்து வர்ற ஆத்தாமைய விட, அந்த வீட்ல தொடர்ந்து வாழப் போறவங்க அவஸ்தய நினைச்சா நெஞ்சு பொங்கிரும்.

சோவை ரொம்பப் பிடிக்கும். துக்ளக் முதல் இஷ்யூல இருந்து ரசிச்சு படிச்சுட்டு இருக்கேன்.

ஒரு ஜேனலிஸ்டா சோ மேல எப்பவுமே பொறாமை உண்டு. சீரியஸ் ஜேனலிஸ்ட்னா, குறிப்பா எடிட்டர்னா, கட்டாயம் அவங்களுக்கு அந்தாள் மேல பொறாமை வரும். 'எவ்ளவ் சுதந்திரமா எழுதுறான்யா, நம்மால முடியுமா?' ங்ற பொறாம.

ஆனா பொறாம பட்ற எல்லாரையும் விட சோ புத்திசாலி. அதனாலதான் தமிழ், இங்லிஷ் பேப்பர்ஸ், மேகசின்ஸ்ல எடிட்டரா சேரச் சொல்லி வந்த ஆஃபர் எல்லாத்தயும் கொஞ்சங்கூட தயங்காம நிராகரிச்சுட்டாரு.

Kathir's tribute to Cho S Ramaswamy

தயங்காமனு சொல்ல காரணம், அவருக்கு வந்த ஆஃபர்ஸ் அப்படி. பிரமாண்டமான நியூஸ் நெட்வொர்க், வரம்புகள் இல்லாத செலவு அனுமதி, இந்தியால எந்த ஒர்க்கிங் எடிட்டரும் நினைச்சுப் பாக்க முடியாத சம்பளம், வசதிகள். கன்சிடர் பண்ணாமலே நோ சொன்னவர்.

அவருக்குத் தெரியும். பணம், புகழ், செல்வாக்கு, பந்தாவுக்கு மயங்கி அந்த மாதிரி பொறுப்பை ஏத்துகிட்டா அதுக்கு கொடுக்கிற முதல் விலை சுதந்திரம்னு.

சம்பளம் வாங்குற ஜேனலிஸ்ட், எடிட்டர் எவரா இருந்தாலும் மனசுல பட்டத அப்படியே சொல்ல முடியாது, எழுத முடியாது. பல விஷயங்கள்ல காம்ப்ரமைஸ் பண்ணிதான் ஆகணும். அதனாலதான் சொந்தமாவே ஆரமிச்சார். கூடப் பிறந்தவங்க, குடும்ப உறுப்பினர்னு யாரையாச்சும் பார்ட்னரா சேத்து ஆரமிச்சிருந்தாலும் அவரோட சுதந்திரம் முடங்கி போயிருக்கும். அதச் செய்யல. ஒரு பெரிய பத்திரிகை முதலாளி தாராளமா நிதி உதவி செய்ய வந்தப்பவும் கடனா வேணா வாங்கிக்கிறேன், எப்ப திருப்பி தருவேன்னு சொல்ல முடியாதுனு பயமுறுத்தி ஓட வச்சார்.

யாருடைய தயவும் அவசியமில்லாத ஒரு நிலைல இருந்து பத்திரிகை நடத்தினதால மனசுக்கு சரின்னு பட்டத அப்படியே எழுத அவரால முடிஞ்சுது. நிர்வாண நிஜத்துக்கு இருக்குற கவர்ச்சி அலங்கரிக்கப்பட்ட பொய்க்கு ஒருநாளும் கிடைக்காது. கிடைச்சாலும் நிக்காது. அதனால துக்ளக் யாரையெல்லாம் விமர்சனம் செஞ்சுதோ யாரையெல்லாம் கேலி கிண்டலுக்கு உள்ளாக்குச்சோ அவங்க எல்லாருமே துக்ளக்க காத்திருந்து வாங்கிப் படிச்சாங்க.

நாடகம், சினிமா, வக்கில்னு வேற வழிகள்ல வருமானம் வந்ததால வாழ்க்கைக்கு பத்திரிகை தொழில அவர் நம்பியிருக்க அவசியம் ஏற்படல. அதோட, துக்ளக்க ஒருவெகுஜன பத்திரிகயா மாத்தணும், அதிகம் வித்து, விளம்பரங்கள் வாங்கி நிறைய சம்பாதிக்கணும்னு எண்ணமும் அவருக்கு இல்ல. படிச்சவன், விவரம் தெரிஞ்சவன், தெரிஞ்சுக்க விரும்புறவன் துக்ளக் வாங்கிப் படிச்சா போதும்னு சோ நினைச்சார். "பாமரன் படிக்கதான் நிறைய பேர் பத்திரிக நடத்தறாளே; அவா கூட எதுக்கு வீணா போட்டிப் போடணும்?"

ஒருத்தர எதிர்த்து அல்லது கண்டிச்சு எழுதினா அவர் மேல தனிப்பட்ட விரோதம் இருக்குறதா வாசகன் நினைச்சுர கூடாதுங்றதுல அவர் கவனமா இருந்தார். ரெகுலர் ரீடர்சுக்கு இது தெரியும். தலையங்கத்துலயோ கட்டுரைலயோ ஒரு தலைவர விளாசி இருந்தார்னா, கேள்வி பதில்ல அந்த தலைவரோட ஒரு சிறப்பை சிலாகிச்சு இருப்பார். எவ்வளவு கெட்ட மனுசன் கிட்டயும் ஒரு நல்ல விஷயம் இல்லாமலா போகும்?

இது அவருக்கு ரொம்ப கை கொடுத்தது. உதாரணமா கருணாநிதி எந்தக் காலத்திலயும் பதவிக்கு வந்துரக் கூடாது; அது தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல, இந்தியாவுக்கே கேடுனு நாலு பக்கம் அடிச்சு எழுதிட்டு, "கலைஞரிடம் எனக்குப் பிடித்தது அவரது அவரது அயராத உழைப்பும், கடுமையான விமர்சனத்தையும் சகஜமாக எடுத்துக்கொள்கிற பக்குவமும்தான்," அப்படீனு அயன்புரம் சத்யநாராயணன் கேள்விக்கு அதே இதழ்ல பதில் சொல்லிருப்பார்.

இப்டி ஒவ்வொரு தலைவர் மூஞ்சிலயும் ஓங்கி ஒரு குத்து விட்டுட்டு, உடனே அவருக்கு துடைச்சுக்க துணியும் குடிக்க கூல்டிரிங்கும் கொடுத்தா யாரால அவர ஓப்பனா எதிர்க்க முடியும்? கரெக்டா சொல்லணும்னா இப்படி hot & cold அப்ரோச் மூலமா பல தலைவர்களுக்கு அவங்ககிட்ட இல்லாத நல்ல குணத்தையும் சோ உண்டாக்கி கொடுத்தார்னு சொல்லணும். இது எக்சாகரேஷன் மாதிரி தெரியும். ஆனா தொடர்ந்து துக்ளக் படிச்சுட்டு வந்தவங்களுக்கு சோ இந்த கலைல எவ்ளோ எக்ஸ்பர்ட் ஆயிருக்கார்னு புரியும்.

சோ மாதிரி ஒரு ஜேனலிஸ்ட் உண்மையான சுதந்திரத்த அனுபவிக்க முடிஞ்சா கண்டிப்பா அவனுக்கு யார் மேலயும் வெறுப்பு வராது. அவன் மேலயும் யாருக்கும் வெறுப்பு வராது. கோபம் வரலாம். அது சீக்கிரம் போயிட்ற விஷயம்தான.

தயவு தாட்சண்யம், கரிசனம் இதெல்லாம் சோ கிட்ட கிடையாது. அவர் எதுக்குமே உணர்ச்சி வசப் பட்றதில்லை. ஓவரா படிச்சது மட்டுமில்ல, ஒரு பெரிய்ய சர்கிள்ல வெரைடி ஆஃப் பீப்பிளோட பழகக் கிடைச்ச வாய்ப்பும், பக்கா பிராமண குடும்ப வளர்ப்பும் அவருக்குள்ள சின்ன வயசிலயே சில விஷயங்கள பதிச்சுருக்கு. விதி மேல நம்பிக்கை அதுல ஒண்ணு. அதுவே பல சோதனைகள அவர் சுலபமா கடந்து வர துணை நின்னுருக்கு.

பற்றுதல் இல்லாத ஒரு பத்திரிகையாளர்னு சொல்லணும். ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரியா பாக்குற ரெண்டு தரப்பும் அவர்கிட்ட ஆலோசனை கேக்க வர்றாங்கன்னா எந்த அளவுக்கு அவர் நம்பிக்கைக்கு உரியவரா இருந்தார்னு தெரிஞ்சுக்கலாம். சொன்ன ஆலோசனையப் பின்பற்றி அவங்க ஜெயிச்சுட்டாங்கன்னா அதுக்கு கட்டணமா எந்த சலுகையும் கேட்டு வாங்க மாட்டார். என்னோட ஆலோசனைய ஃபாலோ பண்ணிதான் இன்னார் ஜெயிச்சார்னு பப்ளிக்கா சொல்லி இன்னார் மானத்த வாங்கவும் மாட்டார். இதெல்லாம் ரொம்ப அபூர்வ குணங்கள். அதுவும் இன்னிக்கு மீடியால.

காலேஜ் படிக்கிற காலத்துல எல்லாரும் ஒரு நாளைக்காவது கம்யூனிஸ்டா சிந்திப்பான்னு சொல்லுவாங்க. அப்படி சமதர்ம சமூக சிந்தனைகளோட வளர்ந்த பல பேர் முதலாளித்துவம் அப்படி ஒண்ணும் மோசமான கொள்கை இல்லைனு பின்னாடி உணந்துருக்காங்க. பணம் வச்சிருக்கவன் அத வீட்ல பூட்டி வச்சா சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை. அந்த பணத்த போட்டு பேங்க்ல கடனும் வாங்கி ஒரு கம்பெனி ஆரமிச்சா ஊர்ல எத்தனையோ பேருக்கு பொழப்பு நடக்கும். அத செய்யும்போது தனக்கும் அவன் கணிசமா லாபம் பாத்துக்குவான். அது பெரிய பாவமில்லை. அதுக்காக அவனுக்கு சாபம் விட்றது நியாயமில்லைனு தன்னோட எழுத்து மூலமாவும் பேச்சு மூலமாவும் துக்ளக் வாசகர்கள் நிறைய பேருக்கு மனமாற்றம் உண்டாக்கினார். அதுக்காக அவருக்கு கிடைச்ச அசிங்கமான பட்டங்கள பத்தி கவலையே படல.

கம்யூனிச கொள்கைகள் சோவுக்கு சுத்தமா பிடிக்காது. ஏழைகளும் வசதி உள்ளவனா மாற கேபிடலிசம் வழி காட்டுது. இருக்கிற கொஞ்ச நஞ்ச பணக்காரங்களையும் ஏழையாக்கி சமத்துவம் ஏற்படுத்த வழி காட்டுது கம்யூனிசம்னு நக்கலடிப்பார். ஆனா கம்யூனிஸ்ட் தலைவர்கள் மேல ரொம்ப மரியாதை உண்டு. அவங்கல்லாம் கெட்டவங்க இல்ல; வழி தவறின குழந்தைகள் மாதிரிம்பார்.

ஊடகர்கள பத்தி அவருக்கு பொதுவா உயர்ந்த எண்ணம்லாம் கிடையாது. ஆனா காட்டிக்கவே மாட்டார். நிறைய படிக்கணும்; நிறைய டிஸ்கஸ் பண்ணணும்; எல்லார்கிட்டயும் கத்துக்க ஏதோ விஷயம் இருக்குன்னு நம்பணும்; யாரையும் எந்தக் காலத்துலயும் சார்ந்திருக்க கூடாது; கண்மூடித்தனமா யாரையும் எதிர்க்கவும் கூடாது; அன்ஃபார்ச்சுனேட்டா இப்ப நிறைய ஜேனலிஸ்ட்ஸ் அப்படித்தான் இருக்காங்க என்பார். அதே சமயம் தனக்கு ஒத்துவராத ஜேனலிஸ்ட் பத்தி மூணாவது மனுசங்க கிட்ட பேச வேண்டி வந்தா அவங்களுக்கே தெரியாத அந்த ஜேனலிஸ்டோட பாசிடிவ் ஸ்ட்ரீக் ஒண்ணை சுட்டிக் காட்டி அசத்துவார்.

"யார் சொல்றதையும் பெருசா எடுத்துக்கவேணாம். நாளைக்கே தலைகீழா மாத்தி பேசுவாங்க. இதுதான் உலகம்.அதனால எதையும் சீரியசா எடுத்துக்காத. உண்மைனு உன் மனசுக்கு தோண்றத சொல்லிட்டு போய்ட்டே இரு. சொசைட்டில என்ன எஃபக்ட்னு நின்னு வேடிக்க பாக்காத. அதுக்குள்ள அடுத்த நாள் விடிஞ்சுரும். கடமய செய்; பலன எதிர்பாக்காத."

இதுதான் சோ ங்ற ஒரு எடிட்டர்கிட்ட இருந்து தூரத்ல நின்னே கத்துகிட்ட வாழ்க்கைமுறை. தேங்யு சோ சர்.

English summary
Veteran Journalist Kathir Vel's obituary to late Cho S Ramaswamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X