கதிராமங்கல மக்கள் போராட்ட எதிரொலி.. ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகத்தில் போலீசார் குவிப்பு
கதிராமங்கல மக்கள் சென்னையில் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் பரவியதை அடுத்து சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமை செயலகம், ராஜ்பவன் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதா
சென்னை: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி திட்டங்களுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், கதிராமங்கல கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. போராட்டக்காரர்கள் 3 பிரிவாக பிரிந்து சென்னை தலைமை செயலகம், ராஜ் பவன், பாஜக அலுவலகம் என 3 இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சென்னையில் தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை மற்றும் தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தின் 2 நுழைவாயில்களிலும் முழுமையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கு போராட்டம் நடத்த வரும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஓஎன்ஜிசியை எதிர்த்து போராடிய போது கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.