ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு.. கதிராமங்கலம் கிராம மக்களின் தொடர் போராட்டம் தற்காலிக வாபஸ்!
தஞ்சாவூர்: போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 10 பேரின் ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்றுக்கொண்டதால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கதிராமங்கலம் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று கோரி கடந்த மாதம் 30ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடையடைப்பு, உண்ணாவிரதம் என பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
மேலும் ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும். பத்து பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை போலீசார் திரும்பப் பெற வேண்டும். அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து 9வது நாளாக போராடி வந்தனர்.
இதனிடையே கைதான 10 பேரும் தஞ்சை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு ஏற்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கதிராமங்கலம் மக்கள் தங்களது தொடர் போராட்டம், உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதனால் 9 நாளாக நீடித்து வந்த தொடர் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.