இன்றுடன் விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்.. இனி அதிகபட்ச வெயில் இருக்காது என தகவல்!
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
சென்னை: கடுமையான வெப்பம், அனல் காற்று, புழுக்கம், வியர்வை, சரும பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை தமிழக மக்களுக்கு வாரி வழங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் கத்திரி தொடங்கும் முன்பே அதாவது ஏப்ரல் மாத துவக்கத்திலேயே வெயில் அனலை கக்கியது.
முடங்கிய மக்கள்
பல மாவட்டங்களில் குறிப்பாக வேலூர், திருத்தணி, கரூர், உள்ளிட்ட பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி என பதிவாகி அனைவருக்கும் பீதியை கிளப்பியது. இதனால் பகல் முழுவதும் வெப்பமும், இரவு முழுவதும் புழுக்கத்திற்கும் மக்கள் ஆளானார்கள். இதனால் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். சாலைகளில் வெயில் நேரத்தில் வெளியில் செல்வோர் குடைகளையும், பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடியபடியும் நாட்களை நகர்த்தினர்.
வெப்பசலனம் தந்த மழை
இதனிடையே, கடந்த மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் தமிழக மக்கள் மேலும் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் பெரும்பாலானோர் ஊட்டி, கொடைக்கானல் என கோடைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்தார்கள். இருப்பினும் சில மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வந்தது. இதில் இதனால் அந்தந்த மாவட்ட மக்கள் ஓரளவு வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்து வந்தனர்.
இன்றுடன் விடைபெறுகிறது
ஆனாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. மாறாக வெயில் அச்சத்தை கிளப்பிக் கொண்டுதான் இருந்தது. இந்நிலையில் கடந்த 24 நாட்களாக தாக்கத்தை ஏற்படுத்திய கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கும்போது, அக்னி நட்சத்திரம் முடிந்தபின் அதிகபட்ச வெயில் இருக்காது என்றனர்.
வெப்பம் குறையும் என தகவல்
மேலும் தெற்கு அந்தமானில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பருவமழையானது தமிழகத்தை நெருங்கி வரும் சமயம் ஈரப்பதமான காற்று வீசக்கூடும் என்றும் அதன் காரணமாக வெப்பத்தின் தாக்கும் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எப்படியோ, தீயாய் அனலை வாரி இறைத்து பல வழிகளில் இன்னலை வழங்கி பட்டைய கிளப்பி கொண்டிருந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுவதால் தமிழக மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.