கந்து வட்டி கொடுமை... கலெக்டர் அலுவலகங்களில் தொடரும் தற்கொலை முயற்சி - தவிக்கும் போலீஸ்
கந்து வட்டி கொடுமையினால் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
திருச்சி: கந்து வட்டி கொடுமை காரணமாக திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தற்கொலை முயற்சிகள் தொடர்வதால் போலீசார் தவித்து வருகின்றனர்.
கந்துவட்டி கொடுமையினால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவுந்தப்பாடியை சேர்ந்த மனோன்மணி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார், மனோன்மணியை தடுத்து நிறுத்தினர்.
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் மலர்கொடி என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ரூ.10,000 கடனுக்கு ரூ.3 லட்சம் பணம் திருப்பி கொடுத்தும் கடன் கொடுத்தவர் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். பலமுறை புகார் அளித்தும் ஆட்சியர் ராசாமணி நடவடிக்கை எடுக்காததால் மலர்கொடி இந்த விபரீத முடிவு எடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேட்டு என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எறையூரைச் சேர்ந்த அருந்ததியின் மக்கள் பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்க வந்திருந்தனர். ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்களில் ஒருவராக சேட்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 வாசல்கள் மூடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்புகள் அதிகரித்து வருவதால் தமிழக காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.