காட்பாடி டி.எஸ்.பி. மகன் தூக்குப்போட்டு தற்கொலை: காதல் விவகாரமா என விசாரணை
காட்பாடி டிஎஸ்பி முரளிதரனின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்: காட்பாடி டிஎஸ்பி முரளிதரனின் மகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் -அழகாபுரம் எம்.ஜி.ரோடு பகுதியை சேர்ந்த முரளிதரன் வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரக்கு சத்யபிரியா என்ற மனைவியும் சசிதரன் என்ற 26 வயது மகனும் பிரீத்தி என்ற மகளும் உள்ளனர்.
பி.எஸ்சி. வரை படித்துள்ள சசிதரன் குரங்குசாவடி பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு சசிதரன், வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்க செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் சசிதரன் கீழே வராததால் அவரது தாய் சத்தியபிரியா அங்கு சென்று பார்த்தார். அப்போது, சசிதரன் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சசிதரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சசிதரன் வயிற்று வலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனவேதனையில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
மேலும், சசிதரன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சசிதரன் ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது உயிர் பிழைத்த அவர் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.