உடுமலை சங்கர் ஆணவ கொலை.. தண்டனையை ரத்து செய்ய கவுசல்யா தந்தை உள்ளிட்ட குற்றவாளிகள் ஹைகோர்ட்டில் மனு
Recommended Video
சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி, கவுசல்யா தந்தை உள்பட 8 பேரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கூலிப்படையினர்
இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது.
ஆணவ கொலை
இதில் சங்கர் உயிருக்குப் போராடி உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் கவுசல்யா உயிர் பிழைத்தார். தமிழகத்தையே இந்த ஆணவப் படுகொலை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வழக்கு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, நீதிபதி அலமேலு நடராஜன் அன்றைய தினம் தீர்ப்பு வழங்கினார்.
தூக்கு தண்டனை
முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி (42), ஜெகதீசன் (33), பழனி எம்.மணிகண்டன் (27), பி.செல்வக்குமார் (25), தமிழ் (எ) கலைதமிழ்வாணன் (26), மதன் (எ) எம். மைக்கேல் (27) ஆகிய 6 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதித்தார். தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜூக்கு (25) வாழ்நாள் ஆயுள் தண்டனை, கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டி மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அநேநேரம், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி (37), தாய்மாமன் பாண்டித்துரை (51), கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் (21) ஆகிய 3 பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். கவுசல்யாவுக்கும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கும் நிவாரணமாக ரூ.11 லட்சத்து 95,000ம் தொகையை சரிபாதியாக பிரித்துக் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேல்முறையீடு
இதனிடையே, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சின்னசாமி உள்ளிட்ட 8 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி, சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்டு உடுமலை டிஎஸ்பிக்கு, சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.