உயிரை காதலில் ஒளித்து வைத்துவிட்டேன் என பாடிய கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்! - வீடியோ
சென்னை: கவிதைகளின் அரசன் என்றழைக்கப்பட்ட 'கவிக்கோ' அப்துல் ரகுமான் பனையூரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2 மணியளவில் காலமானார். புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவரான அப்துல் ரகுமான் தன் 80 வயதில் காலமானார்.
வானம்பாடி இயக்க காலத்தில் உதித்த பல நட்சத்திர கவிஞர்களில் அப்துல் ரகுமானும் ஒருவர். கவிதை மரபுக் கவிதையோ, புதுக்கவிதையோ மக்களின் பிரச்சனைகளை அது பாட வேண்டும் என்கிற எழுச்சி தமிழ் இலக்கிய உலகில் 1970களில் பிறந்தது. அப்போது மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் குறித்து பாடிய கவிஞர்களுள் முக்கியமானவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
கவிக்கோவின், 'பாடப் புத்தகங்களே குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்' என்ற கவிதை குழந்தைகள் மீது சுமத்தப்படும் கல்விச் சுமையை எடுத்துச் சொல்ல கவிஞர்கள் இன்றும் கையாளும் கவிதையாக இருக்கிறது.
தேர்தல் அரசியல் குறித்து எழுதிய கவிக்கோ, 'ஐந்தாண்டுக்கு ஒருமுறை/சுயம்வர மண்டபத்தில்/போலி நளன்களின் கூட்டம்/கையில் மாலையோடு/குருட்டு தமயந்தி' என்று எழுதுய கவிதை, தேர்தல் அரசியலில் மாற்றம் கொண்டு வரப்படாதவரை போற்றப்படும் கவிதையாக இருக்கும்.
'என் உயிரைக்/காதலில்/ஒளித்து வைத்துவிட்டேன்/மரணமே!/ இனி என்ன செய்வாய்?' என்று மரணத்தையே கேள்வி கேட்ட கவிஞரைத்தான் மரணம் தழுவிக்கொண்டுள்ளது. புதுக்கவிதை இருக்கும் காலம்தோறும், கவிக்கோ புதுக்கவிதைகளின் காலமாக வாழ்வார்.