கடைசி வரை சினிமா பாடல்களை எழுத மாட்டேன் என தீர்க்கமாய் இருந்த கவிக்கோ!
பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான கவிக்கோ அப்துல் ரஹ்மான் சினிமா பாடல்களை எழுதவே மாட்டேன் என தீர்க்கமாய் இருந்தார்.
சென்னை: பல்வேறு விருதுகளுக்கும் படைப்புகளுக்கும் சொந்தக்காரரான கவிக்கோ அப்துல்ரஹ்மான் கடைசி வரை சினிமாவுக்கு பாடல்களை எழுதமாட்டேன் என தீர்க்கமாய் இருந்தவர் ஆவர். பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம். குத்துப்பாட்டு என்றால் குதூகலமாய் ஆடுகிறோம் என்று கூறியவர் கவிக்கோ.
கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 80 வயதான கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.
1937-ஆம் ஆண்டு நவம்பர் 9-ல் மதுரை மாவட்டத்தில் பிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.
தமிழ்த்துறை தலைவர்
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.
கவிதைகள், கட்டுரைகள்
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார். இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
ஆலாபனைக்கு சாகித்திய அகடாமி
1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றிருந்தார். மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார்.
சினிமாவுக்கு பாட்டில்லை
பல்வேறு படைப்புகளுக்கு சொந்தக்காரரான கவிக்கோ அப்துல் ரஹ்மான் சினிமாவுக்கு பாடல்களை எழுத மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக கவிக்கோ சினிமாவில் இடம் பெறும் குத்துப்பாட்டுகளை விரும்பியதில்லை.
பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம்.
சினிமா குத்துப்பாடல்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிக்கோ பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம். குத்துப்பாட்டு என்றால் குதூகலமாய் ஆடுகிறோம் என்றார்.
கன்னத்தில் ஒன்று போட..
மறைந்த வாலிப கவிஞர் வாலியும் கவிக்கோவும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். ஒருமுறை இயக்குநர் ஒருவர் கவிஞர் வாலியிடம் கன்னம் என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றாராம். கன்னம் என்பதே எளிமையானது தான் என்று அவர் சொல்லிப் பார்த்தார். இயக்குனர் கேட்கவில்லை. இதனை கவிக்கோவிடம் கவிஞர் வாலி சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டே சொன்னது, 'கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே..?'