சத்யராஜை வாட்டாள் நாகராஜ் எதிர்க்க காரணம் ரஜினி.. பிரபல இயக்குநர் புது குண்டு
ரஜினிகாந்துக்கு எதிராகப் பேசினால்... என்னும் எச்சரிக்கை சத்யராஜுக்கு எதிரானதல்ல.. நமக்கு எதிரானது என இயக்குநர் கவிதா பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினிகாந்த்துக்கு எதிராக சத்யராஜ் பேசியததுதான் அவருக்கு வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்று, திரைப்பட இயக்குநர் கவிதா பாரதி தெரிவித்துள்ளார்.
கவிதா பாரதி தனது முகநூலில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: சத்யராஜ் எந்த ஓட்டரசியல் கட்சியோடும் தன்னை இணைத்துக் கொண்டு அதன் மூலம் எம்.எல்.ஏ.,அல்லது எம்.பியாக விரும்பியவரன்று.. மாறாக பெரியார் பற்றாளனாகத் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்..
ஈழ ஆதரவுப் போராட்டங்களிலும், காவிரி நதி உரிமைப் போராட்டங்களிலும் உண்மையான உணர்வோடு பங்கேற்றவர்.. தமிழர் உரிமைக்காக குரல் கொடுப்பவை என்று அவர் நம்பும் இயக்கங்களுக்கு விளம்பரமில்லாமல் அவர் செய்த உதவிகள் ஏராளம்..
பெருந்தன்மையான மன்னர்
ஈரோடு வட்டாரத்தை செழிப்பாக்கி முப்போகமும் பாயும் காளிங்கராயன் கால்வாய் காளிங்கராயன் என்னும் சிற்றரசன் வெட்டியதாகும்.. தனது சொந்த நிலத்தின் ஆதாயத்திற்காகவே இந்தக் கால்வாயை அரசன் வெட்டுகிறான் என்னும் குற்றச்சாட்டு எழுந்தது.. கால்வாயைத் திறந்துவிட்டு நானோ, என் குடும்பமோ,
இனி வரும் என் சந்ததியினரோ அள்ளிக்குடிக்க்கூட இந்த வாய்க்காலில் ஒரு கை நீரை எடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு கோயமுத்தூர் பகுதிக்குக் குடி பெயர்ந்தான் காளிங்கராயன்..
தலித் தலைமை கேட்டார்
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் காளிங்கராயன் கால்வாய்க்கான ஒரு விழாவுக்கு சத்யராஜை அழைத்தனர்.. ஒரு தலித் தலைமையில் அந்த விழா நடக்குமானால் நான் வருகிறேன் என்று சொன்னவர் சத்யராஜ். .
ரஜினியை விமர்சித்தார்
அப்படிப்பட்டவர் காவிரி நதி நீர் உரிமைக்கான ஒரு கூட்டத்தில் ரஜனிகாந்தை விமர்சனம் செய்து பேசினார். . அதில் அவருக்கு சொந்த லாபம் எதுவுமில்லை.. பல ஆண்டுகளுக்கு முன் பேசிய வார்த்தை ரஜினிகாந்த் மனதை புண்படுத்திவிட்டது.. எனவே அந்த வார்த்தைகளுக்காக சத்யராஜ் மன்னிப்புக் கேட்க வேண்டுமென வட்டாள் நாகராஜ் கூறுகிறார்.. ரஜினிகாந்துக்கு எப்போதும் வட்டாள்கள் இருக்கிறார்கள்.. கூடவே நம்மாட்களும் இருக்கிறார்கள்..
ரஜினிக்காக எதிர்ப்பு
நியாயமாக இது நம் தன்மானப்பிரச்னை என நாம் சத்யராஜ் பக்கம் நிற்க வேண்டும், அவரைத் தனிமைப் படுத்திவிடக்கூடாது.. நடிகனாகச் சாவதைவிடவும் தமிழகனாகச் சாகவே விரும்புகிறேன் எனறு சொல்லிவிட்டு தன் வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறார அவர்.. தான் நடித்த படத்தை சிக்கலுக்குள்ளாக்காத பெருந்தன்மை ஒருபோதும் அவரது கெளவரக்குறைவாகாது. ரஜினிகாந்துக்கு எதிராகப் பேசினால்... என்னும் எச்சரிக்கை சத்யராஜுக்கு எதிரானதல்ல.. நமக்கு எதிரானது.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாகராஜ் எதிர்ப்புக்கு காரணம்
ஆனால் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் சத்யராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்தது 9 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு பேச்சுக்காக என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் குசேலன் திரைப்படம் வெளியானபோது, ரஜினி பேசிய ஒரு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க கூறி ஆர்ப்பாட்டம் நடத்தியது வாட்டாள் கோஷ்டிதான். "பெரிய படங்கள் வெளியாகும்போது இவ்வாறு இவர்கள் மிரட்டுவதன் பின்னணியில் லாப நோக்கம் ஒழிந்துள்ளது" என்கிறார் நடிகர் மயில்சாமி.