ஓபிஎஸ், ஈபிஎஸை கண்டு நான் பயப்படமாட்டேன்.. நீக்கியதற்கு காரணம் தேவை.. கேசி பழனிச்சாமி ஆவேசம்
கட்சியில் இருந்து நீக்கியது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கட்சியில் இருந்து நீக்கியது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும் அக்கட்சியின் எம்பியுமான கேசி பழனிச்சாமி, காவிரில மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று கூறியிருந்தார்.
மத்தியில் ஆளும் பாஜகவும் அதிமுகவும் இணக்கமாக இருந்து வரும் நிலையில் கேசி பழனிச்சாமியின் இந்த கருத்து அதிமுக, பாஜக வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கேசி பழனிச்சாமி நீக்கம்
இந்நிலையில் கேசி பழனிச்சாமி கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளும் முரணாக செயல்பட்டதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உத்தரவிட்டனர்.
அச்சப்படமாட்டேன்
இந்நிலையில் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து ஓபிஎஸ் ஈபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும் என கேசி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸை கண்டு தான் அச்சப்படமாட்டேன் என்றும் அவர் கூறினார்.
நீக்கப்பட்டது செல்லாது
ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி செல்லாது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டதாகவும், அதனால் ஓபிஎஸும் ஈபிஎஸும் கட்சியில் இருந்து நீக்குவது செல்லாது என்றும் கூறினார்.
முன்பே கட்சிக்கு வந்தவன்
எந்த இடத்தில் கட்சியின் கொள்கையை மீறினேன் என ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். ஓபிஎஸ் ஈபிஎஸ்க்கு முன்பாக கட்சிக்கு வந்தவன் நான் என்றும் கேசி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஓபிஎஸ்,ஈபிஎஸ்க்கு சவால்
மோடியிடம் அதிமுகவை ஓபிஎஸும் ஈபிஎஸும் அடகு வைக்கப் பார்க்கிறார்கள் என்றும் கேசி பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் மார்ச் 30ஆம் தேதிக்குள் ஓபிஎஸும் ஈபிஎஸும் காவிரி மேலாண்மை வாரியத்தை பெற்றுவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகவும் கேசி பழனிச்சாமி தெரிவித்தார்.